பெண் குழந்தைகள் தேவை இல்லாமல் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பள்ளி மாணவிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். பெற்றோர்களுடன் சேர்ந்து டிவி சீரியலை பார்க்க வேண்டாம். அமைச்சர் கீதாஜீவன் பெண் பள்ளி மாணவிகளுக்கு அறிவுரை.
அந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கூறியதாவது: “பள்ளியில் பெண் குழந்தைகள் கவனமாக படிக்க வேண்டும். டிவியில் சீரியல் பார்க்கக் கூடாது. சினிமா பார்த்தால் கூடவும் 3 மணி நேரத்தில் கதை முடிந்து விடும். ஆனால் சீரியல் நம்மை அடிமைப்படுத்தும். ஆகையினால் பெற்றோர்களுடன் சேர்ந்து டிவி சீரியலை பார்க்க வேண்டாம்.
அறிவு ஆற்றல் வளர்க்கும் வகையில் சீரியல் கிடையாது. பெண்களை தவறான தோற்றத்தில் வில்லியாக காட்டப்படுகிறது. அப்படித்தான் இன்று சீரியல் உள்ளது. ஆகையினால் எப்போதும் பெண் குழந்தைகள் சீரியலை பார்க்க வேண்டாம். மேலும் செல்போன் நல்ல காரியத்திற்கு பயன்படுத்த வேண்டும். அதில் தேவையில்லாத விஷயம் வருவதை மாணவிகள் தவிர்க்க வேண்டும். மனதை உறுதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பிரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கேட்கும் போது நீங்கள் கொடுக்கக் கூடாது. தெரியாதவர்களுக்கு பிரண்ட்ஸ் ரிக்வெஸ்ட் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான பெண் குழந்தைகள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. ஆகையினால் செல்போனை தேவைக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும்”. இவ்வாறு அமைச்சர் கீதாஜீவன் மாணவிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.