போதை ‘கஞ்சா சாக்லேட்’களை பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்த ராஜஸ்தான் வாலிபர், கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்புடைய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மத்தியில், கஞ்சா பயன்பாடு இருப்பதாகவும், கஞ்சாவை சாக்லேட் வடிவத்தில் விற்பனை செய்வதாகவும், போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைத்து, போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி தலைமையிலான தனிப்படை போலீசார், தெப்பக்குளம் அருகே பைக்கில் சுற்றிய வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கேத்தன் குமார், 30 என்பதும், கோவையில் டீக்கடையில் பணிபுரிந்து, சில பள்ளி, கல்லுாரிகளில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதும் தெரியவந்தது.
அவர் பதுக்கி வைத்திருந்த, 35 கிலோ கஞ்சா சாக்லேட் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்; மதிப்பு 13 ஆயிரம் ரூபாய்.தவிர, தடை செய்யப்பட்ட 140 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன; மதிப்பு 2.94 லட்சம் ரூபாய். அவர் பயன்படுத்தி வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் கூறுகையில், ‘கஞ்சாவை, சாக்லேட் போல மாற்றி, அதன் மீது வழக்கமான மிட்டாய் கவர் சுற்றி விடுகின்றனர். வெளிப்பார்வைக்கு மிட்டாய் போலவே தெரியும். சுவைத்துப் பார்த்தால் தான் கஞ்சா சாக்லேட் என்பதை கண்டுபிடிக்க முடியும். பிற மாவட்டங்கள், மாநிலங்களிலும் இவர்களது நெட்வொர்க் இருக்க வாய்ப்புள்ளது’ என்றனர். இதில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.