சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியத்துக்குட்பட்ட செட்டிகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் யோகராஜ் (வயது 32). இவர் தனது வீட்டின் அருகே ஸ்டூடியோ மற்றும் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால் யோகராஜ் வழக்கத்தை விட முன்னதாகவே கடையைப் பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். நேற்று அதிகாலை அவர் எழுந்து வந்து பார்த்தபோது கடையின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்திருக்கிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தார். அங்கு கடைக்குள் வைத்திருந்த ₹.57ஆயிரம் ரொக்கம் மற்றும் ₹.30ஆயிரம் மதிப்புள்ள கேமரா ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
சம்பவம் குறித்து அவர் புழுதிபட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
சமீப நாட்களாக சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் சுற்று வட்டாரங்களில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியங்களில் காவல்துறையினர் இரவு நேர ரோந்துப் பணிகளை அதிகரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.