பொது பயன்பாட்டு சேவை மையம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீட்டு உச்சவரம்பு மற்றும் அரசு மானிய விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், பொது பயன்பாட்டு மையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரே தொழில் சார்ந்த 20 மற்றும் அதற்கு மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர தொழில்முனைவோர் இணைந்து, அரசு மானியத்துடன், நவீன தொழில்நுட்பங்களுடன், தங்கள் தொழில் சார்ந்த பொது பயன்பாட்டு மையம் அமைக்க இந்த திட்டம் கைகொடுத்து வருகிறது.
திருப்பூர் தொழில்பாதுகாப்புக் குழு, நிட்டிங், பிரின்டிங், டிசைனிங் பொது பயன்பாட்டு மையங்கள்; பல்லடத்தில் விசைத்தறிக்கான பொது பயன்பாட்டு மையங்களை, இந்த திட்டத்தை பயன்படுத்தி உருவாக்கியுள்ளது.மத்திய அரசு சமீபத்தில், பொதுபயன்பாட்டு மையம் அமைக்கும் திட்ட விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தில், மொத்த மதிப்பு 20 கோடி ரூபாய் வரை பொது பயன்பாட்டு மையம் அமைக்க அனுமதிக்கப்பட்டது. மொத்த திட்ட மதிப்பீடு உச்சவரம்பு, 30 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை கூறியதாவது:இந்த திட்டத்தில், பொது பயன்பாட்டு மையம் அமைப்பதற்கான உச்சவரம்பு தொகை 30 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதிக மதிப்பீட்டில், மையங்களை உருவாக்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.பத்து கோடி ரூபாய்க்கும் குறைவான மதிப்பீட்டில் மையம் அமைத்தால், மத்திய அரசு 70 சதவீதம்; மாநில அரசு 20 சதவீதம் என, மொத்தம் 90 சதவீதம் மானியம் என்கிற அம்சமும் புதிதாக சேர்க்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில், திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 18 மாதங்களுக்குள் அரசு அனுமதி கிடைக்கும் எனவும் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.இதன்மூலம், குறு, சிறு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து, குறைந்த முதலீட்டில், திறன் மிக்க பொது பயன்பாட்டு சேவை மையங்களை மிக எளிதாக அமைத்துக்கொள்ளமுடியும்.திருப்பூரில் பின்னலாடை துறையினரை இணைத்து, சேம்பிளிங், மறுசுழற்சி ஆடை, தொழில்நுட்ப ஜவுளி, பினிஷிங், ஆப்செட் பிரின்டிங் என, இந்த திட்டம் மூலம் பல்வேறு புதிய பொதுபயன்பாட்டு மையங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். ஆடை உற்பத்தி மட்டுமின்றி, வேளாண் பொருட்கள் உற்பத்திக்கான பொது பயன்பாட்டு மையங்களும் அமைக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா திருப்பூர்.