கோவை சலீவன் தெருவில் தனியாருக்கு சொந்தமான நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் நகைக் கடைக்கு வரும் தங்கக் கட்டிகளை பட்டறைகளுக்கு அனுப்பி ஆபரணமாக தயாரித்து வாங்கி வருவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் தங்கம் வடிவமைப்பு, தரம் முத்திரை போன்ற பணிகளையும் கவனித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கக் கட்டிகளை பட்டறை கொடுப்பது போல் கணக்கு காட்டியும், பழுதான தங்கக் நகைகள் என திருத்தம் செய்தும் மோசடியில் ஈடுபடத் தொடங்கினார். மேலும் போலியாக பதிவேடு தயாரித்து கம்ப்யூட்டர் பதிவுகளில் திருத்தம் செய்திருக்கிறார். சுமார் 1,467 கிராம் எடையிலான 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகையை ஜெகதீஷ் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுபற்றி தகவலறிந்து வெரைட்டி ரோடு காவல் நிலையத்தில் நகைக்கடையின் மேலாளர் கார்த்திகேயன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் ஜெகதீஷை பிடித்து விசாரித்தனர்.
அதில் பல்வேறு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. ஜெகதீஷ் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையாகி இருக்கிறார். வேலை செய்யும் போது கூட ஆன்லைன் ரம்மி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதில் ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்துள்ளார். தன்னிடமிருந்த பணம் முழுவதும் காலியான பிறகு, நகைக் கடையின் தங்கத்தை எடுத்து மோசடி கணக்கு காட்டத் தொடங்கியிருக்கிறார்.
45 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருக்கும் ஒரு பவுன் தங்கத்தை, பவுன் இருபதாயிரம் என தனக்கு தெரிந்த நண்பர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதத்தில் மட்டும் 55 லட்ச ரூபாய் மதிப்பிலான 180 பவுனுக்கும் அதிகமான நகையை 37 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறார். அந்த பணத்தை வைத்தும் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார்.
இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மட்டும் கடந்த சில மாதங்களில் 2 கோடி ரூபாய் வரை பணத்தை வென்றுள்ளார். ஆனால் ஆசை அவரை விடவில்லை. மேலும் பல கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரம்மி ஆடியுள்ளார். இதில் ஜெகதீஷ் மொத்த பணத்தையும் இழந்து விட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் அவரது வங்கி கணக்கை ஆய்வு செய்த போலீசார், அதில் 98 பைசா மட்டுமே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி ஜெகதீஷிடம் போலீசார் விசாரித்தனர். அதற்கு, விளையாட்டில் வெற்றி, தோல்வி எல்லாம் சாதாரணம். மீண்டும் விளையாடினால் தான் தோற்ற பணத்தை எடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ஜெகதீஷ் மீது மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் ரம்மியால் பலர் தவறான முடிவுகள் எடுத்து வருகின்றனர். சிலர் மோசடி வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.