பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் உடல் நலம் பாதித்த யானையை தேடி அலையும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி அடுத்து கொடுங்கரை ஆற்றங்கரை பகுதியில் உடல் நலம் பாதித்த, 8 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கடந்த, 15ம் தேதி தென்பட்டது.
இரு மாநில வனத்துறையினரும் யானைக்கு சிகிச்சை அளிக்க, யானையை தேடி அலையும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு கோபனாரி செங்குட்டை வனப்பகுதியில் யானை இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும், யானைக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
யானை செங்குட்டையில் இருந்து பூளப்பதி வழியாக பனப்பள்ளி சென்றது. பின்னர், உடல்நலம் பாதித்த யானை, யானைகள் கூட்டத்துடன் இணைந்து சுற்றி வந்தது. இதனால், உடல் நலம் பாதித்த யானையை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.இதை தொடர்ந்து, பெரியநாயக்கன் பாளையம் வனத்துறையினர் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்து, வனத்துக்குள் யானையை கண்டறியும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். யானையின் கால் தடம் மற்றும் யானையின் சாணத்தை எடுத்து பரிசோதனை செய்தனர்.
அதில், யானை உணவு உட்கொண்டு இருப்பது தெரிய வந்தது. மேலும், வனப்பகுதியில் விட்டு விட்டும், தொடர்ந்தும் மழை பெய்து வருவதால், யானையை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.மேலும், யானை வரும் பாதையில் மற்றும் தண்ணீர் தொட்டிகளுக்கு அருகே பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் யானை விரும்பி உண்ணும் பசுந்தீவனங்களை வைத்து யானையின் வரவை எதிர்நோக்கி வனத்துறையினர் காத்திருக்கின்றனர்.
இது குறித்து, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் செல்வராஜ் கூறுகையில்,” உடல் நலம் பாதித்த யானை தொடர்ந்து ஓரிடம் விட்டு இன்னொரு இடத்திற்கு பெயர்ந்து வருவதால், ட்ரோன் உள்ளிட்ட சாதனங்களை கொண்டு யானையின் இடத்தை உறுதியாக கண்டறிய முடியவில்லை.
இதனால் செங்குட்டை, கோழிக்கண்டி, வன குட்டை, ஆனைகட்டி உள்ளிட்ட எட்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உடல்நலம் பாதித்த யானையின் நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த இரண்டு நாட்களாக உடல் நலம் பாதித்த யானை குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. விலங்குகளில் யானை அறிவார்ந்தது என்பதால் தன்னை யாரோ தொடர்ந்து வருகிறார்கள் என்பதை உணர்ந்து மனிதர்களின் கண்களுக்கு புலப்படாமல் உள்ளது” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.