மதுரையில் கோவிலில் கூழ் காய்ச்சும் போது திடீரென வலிப்பு வந்ததால் பாத்திரத்தில் விழுந்த நபர் உயிரிழந்த சமபவம் பெரும் சோக்த்தை ஏற்படுத்தியுள்ளது. ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றும் நிகழ்வு வெகு விமரிசையாக நடப்பதுண்டு. அந்த வகையில், மதுரை பழங்காநத்தம் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத வெள்ளிக்கிழமை என்பதால் நேர்த்திகடனுக்காக பக்தர்களுக்கு வழங்குவதற்காக 6-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் கூழ் தயாரிக்கப்பட்டது.
அப்பொழுது கூழ் காய்ச்சும் பணியில் இருந்த மேலத்தெரு பகுதியை சேர்த்த முத்துக்குமார் என்கிற முருகன் என்ற இளைஞருக்கு எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டது. அந்த வலிப்பின் தாக்கம் காரணமாக அவர் கொதித்துகொண்டிருந்த கூழ் பாத்திரத்தின் மீது சாய்ந்து விழுந்தார்.
அதன் காரணமாக அதீத வெப்பத்துடன் இருந்த கூழானது முருகனின் உடல் முழுவதும் கொட்டியது. உடல் முழுவதும் கூழ் ஊற்றியதால் அவர் காயத்தால் துடித்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸுக்கு கால் செய்தனர். ஆம்புலன்ஸ் வந்தவுடன் அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இளைஞர் முருகனுக்கு 65% தீக்காயம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுப்ரமணியபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடி மாதம் திருவிழாவில் கூழ் காய்ச்சும் பாத்திரத்தில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இளம் தந்தி.