மீளாவிட்டான் கிராமத்தில் அமையவுள்ள மினி டைடல் பார்க் மூலம் தூத்துக்குடியின் வளர்ச்சி அடுத்தகட்டத்திற்கு செல்லப் போவதாக பெரும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நவீன தமிழகத்தை கட்டமைத்த முதல்வர்களில் முக்கியமானவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி. இவரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட டைடல் பார்க் திட்டம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதில் இடம்பிடிக்க பல்வேறு ஐடி நிறுவனங்களும் கடும் போட்டி போட்டன. TIDEL Park என்ற பெயர் தமிழக அரசின் நிறுவனங்களான TIDCO மற்றும் ELCOT ஆகியவற்றில் முதல் சில எழுத்துகளின் இணைப்பில் (TID + EL = TIDEL) இருந்து உருவாக்கப்பட்டது.
டைடல் பார்க் வேலை என்பதே மிகப்பெரிய அந்தஸ்தாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மாறியது. தமிழ்நாட்டின் முதல் டைடல் பார்க் சென்னை தரமணியில் அமைக்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது டைடல் கோவையில் அமைந்தது. மூன்றாவது டைடல் பார்க் சென்னையை அடுத்த பட்டாபிராம் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த சூழலில் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, டைடல் பார்க் திட்டங்களை முடுக்கி விட்டது. அதாவது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் டைடல் பார்க் அமையவுள்ளதாக அறிவித்தது. அதில் விழுப்புரம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் பெயர்கள் இடம்பெற்றன.
குறிப்பாக தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வு செய்யப்படும் என்று தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். பின்னர் அதற்கான வேலைகள் தொடங்கின. இம்மாவட்டத்தில் மட்டும் தான் நிலக்கரி, காற்று, சோலார், அணு உலை ஆகிய நான்கு விதமான ஆதாரங்களில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
இந்த டைடல் பார்க்கிற்கு போதிய இடம் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கட்டுமானப் பணிகளுக்கான டெண்டர் கோரி Tidel Park Limited அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் மினி டைடல் பார்க் பயன்பாட்டிற்கு வந்தால் அப்பகுதி இளைஞர்களுக்கு பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாகும். கட்டுமானம், முதலீடு, வர்த்தகம், மென்பொருள் ஏற்றுமதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வளர்ச்சி ஏற்படும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.