கோவையில் உள்ள பல அரசு, மாநகராட்சிப் பள்ளிகளில், மாணவர்கள் போதைப் பொருட்களின் பிடியில் சிக்கி, பாதை மாறி வருகின்றனர். இவர்களுக்கு எங்கிருந்து போதைப்பொருட்கள் கிடைக்கின்றன என்பது நன்கு தெரிந்தும், தடுக்க முடியாமல் ஏனோ தடுமாறுகிறது போலீஸ். இதுவரை நடந்தது இருக்கட்டும். தனது அதிரடி திட்டங்களால் மக்களிடம் நம்பிக்கையை பெற்றுள்ள, கமிஷனர் பாலகிருஷ்ணன் சாட்டையை சுழற்ற வேண்டும்.
கோவையில் பலரும் போதை பழக்கத்துக்கு, அடிமையாகி வருகின்றனர். காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து, துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இ.கம்யூ., கவுன்சிலர் மல்லிகா, மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தினார். இச்சூழலில், மாநகராட்சி கல்வி குழு தலைவி மாலதி தலைமையிலான குழுவினர், ரத்தினபுரி மாநகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கு படிக்கும் மாணவர்களில் சிலர், போதை பழக்கத்துக்கு அடிமையாகி இருப்பதை கண்டறிந்தனர். கழிப்பறைகளில் போதை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாணவ மாணவியர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்விக்குழு திட்டமிட்டது.அதன்படி, பள்ளி வளாகத்தில் இந்நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி தலைமை வகித்தார்.
மாணவர்கள் மத்தியில் மாநகராட்சி கல்வி குழு தலைவி மாலதி பேசுகையில், “போதையில் விழாதீர்கள். உடல் நிலை, எதிர்காலம் பாதிக்கும். கைக்கு எட்டிய துாரத்தில் கிடைத்தாலும் பயன்படுத்தக்கூடாது. அதற்கான மனோ திடம், மனோ தைரியம் வேண்டும்.நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எதிர்கால வாழ்க்கையை பாழடித்துக் கொள்ளாதீர்கள்” என்றார்.
ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணன் பேசுகையில், “இதற்கு முன் பணியாற்றிய இடங்களில், ஏகப்பட்ட ரவுடிகளை ஒடுக்கியிருக்கிறேன். போதை பொருட்கள் பயன்படுத்துவது தெரியவந்தால், கடுமையான நடவடிக்கை எடுப்போம். மாணவ – மாணவியருக்கு விளையாடுவதற்கு நேரம் ஒதுக்குங்கள். பெற்றோருக்கும் ‘கவுன்சிலிங்’ கொடுக்க வேண்டும்” என்றார்.
போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் பேசுகையில், “போதை பொருள் பழக்கத்துக்கு அடிமையானால், வாழ்நாள் முழுவதும் உங்களால் வெளியே வர முடியாது. நரம்பு மண்டலம் பாதிக்கும். மலச்சிக்கல் பிரச்னை முதலில் ஆரம்பிக்கும். கொஞ்சம் கொஞ்சமாக உடல் நிலை பாதிக்கும். சிறார் சிறுவர் சிறையில் இருந்து வெளியே வந்தால், சமுதாயமே உங்களை வேறு விதமாக பார்க்கும். சினிமாவில் காட்டுவதை போல் நினைக்காதீர்கள்” என்றார்.
‘கெட், செட், கோ’ என்கிற தன்னார்வ அமைப்பினர், விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்
மாணவர்களே… நடிகர்களை ‘பாலோ’ செய்யாதீர்கள். உங்களது செயல்பாடே, உங்களை ஹீரோவாக்காகும். போதை பொருட்கள் பயன்படுத்தினால், டி.சி., கொடுத்து, பள்ளியில் இருந்து வெளியேற்றப் படுவீர்கள். இவ்வாறு பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி. ராஜேந்திரன்.