அரசு கல்லுாரிகளில் புதிதாக துவங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கான ஆய்வகங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும், அரசு கலை கல்லுாரிகளில் அப்பகுதிகளின் தேவை, மாணவர்களின் விருப்பம் போன்றவற்றை ஆய்வு செய்து, புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த, இரு கல்வியாண்டுகளாக, 50க்கும் மேற்பட்ட புதிய படிப்புகள், கல்லுாரிகளில் துவங்கியுள்ளன. இதுபோன்று, ஒவ்வொரு ஆண்டும் துவக்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இது ஒரு புறமிருக்க, ஆய்வகங்கள் மற்றும் பிற அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க, நிதியும் வழங்கப்படுவதில்லை.
அறிவியல் பாடப்பிரிவில், எழுத்து தேர்வுக்கு இணையாக, செய்முறை தேர்வுகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. செய்முறை வகுப்புகள் கட்டாயமானது. ஆனால், புதிய பாடப்பிரிவுகளில் சேரும் மாணவர்களுக்கு, சில கல்லுாரிகளில் செய்முறை வகுப்புகள் பெரிதாக நடப்பதில்லை என புகார் எழுந்துள்ளதால், கல்வித்தரம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து, கல்வியாளர் ஜெயபிரகாஷ்காந்தி கூறுகையில்,”பாடப்பிரிவுகளை துவக்கும் முன், உரிய கட்டமைப்புகள் அரசு உருவாக்க வேண்டியது அவசியம். தொழில்நுட்பக் கல்லுாரிகளில், செயல்படுத்தப்படும் ‘நான் முதல்வன்’ திட்டத்தை, கலை, அறிவியல் கல்லுாரிகளிலும் அரசு செயல்படுத்த வேண்டும்.
இதுதவிர இன்ஜி., கல்லுாரிகளுடன் இணைந்து கலை, அறிவியல் கல்லுாரிகளின் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது, இன்ஜி., கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியும்,” என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.