காட்டம்பட்டி ஊராட்சியில் குப்பை கொட்டுவதை தடுப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள நுாதன அறிவிப்பு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. காட்டம் பட்டி ஊராட்சியில், சில இடங்களில் அறிவிப்பு பலகைகள் ஊராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ளன. இதில் ‘அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ள பகுதியில், குப்பை கொட்டக்கூடாது. மீறி கொட்டுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குப்பை கொட்டும் நபரை வீடியோ எடுத்து ஊராட்சிக்கு அனுப்புவோருக்கு 500 ரூபாய் பரிசு வழங்கப்படும்,’ என கணேசபுரம், அந்தோணியார் நகர், காந்தி காலனி உள்ளிட்ட நான்கு இடங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.பொதுவாக குப்பை கொட்டக்கூடாது என்று அறிவிப்பு வைத்தால் வேண்டுமென்றே கொட்டிச்செல்பவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட இடங்களில் கடந்த ஆறு நாட்களாக ஒருவர் கூட குப்பை கொட்டவில்லை. அந்த இடம் துாய்மையாக உள்ளது. ஊராட்சியின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது,
இதுகுறித்து ஊராட்சித் தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன் கூறியதாவது: காட்டம்பட்டி ஊராட்சியில் 3,100 குடும்பங்கள் வசிக்கின்றன. இதில் நான்கு குடியிருப்பு பகுதிகளை மட்டும் முதல் கட்டமாக தேர்வு செய்துள்ளோம். கணேசபுரம், அந்தோணியார் நகர் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்க நான்கு பேட்டரி வாகனங்களில் துாய்மை பணியாளர்கள் செல்கின்றனர்.
துாய்மைப் பணியாளர்கள் தினமும் செல்லும் பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்களிடம் மட்டும் குப்பையை தர வேண்டும். வீதியில், சாலை ஓரத்தில் கொட்ட கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். மீறி கொட்டுவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என வீடு வீடாக தெரிவித்தோம், தற்போது அறிவிப்பு பலகையும் வைத்துள்ளோம்.இங்கு, அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்ட நான்கு இடங்களில் ஒரு இடத்தில் கூட கடந்த ஆறு நாட்களாக பொதுமக்கள் குப்பை கொட்டவில்லை.
இதை ஊராட்சி முழுவதும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அதற்குத் தேவையான துாய்மை பணியாளர்கள், பேட்டரி வாகனங்கள் இல்லை.துாய்மை பணியாளர்களுக்கு அரசு மிகக் குறைந்த சம்பளம் தருவதால் இந்த வேலைக்கு யாரும் முன்வருவதில்லை. 100 நாள் வேலைத்திட்டத்தில் தினசரி சம்பளமாக 251 ரூபாய் வழங்கப்படுகிறது. இச்சம்பளத்தை துாய்மை பணியாளர்களுக்கு வழங்கினால் வீடு வீடாகச் சென்று குப்பை சேகரிக்க முன் வருவார்கள். எனவே, மாவட்ட நிர்வாகம் துாய்மை பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கவும், பேட்டரி வாகனம் வழங்கினால் பொது இடங்களில் குப்பை கொட்டுவது முற்றிலும் இல்லாமல் போகும்.இவ்வாறு, அவர் கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.