சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள நாகராஜன் நகரைச் சேர்ந்தவர் அப்துல் வாஹித். இவர் இதே பகுதியில் சரக்கு வாகன ஓட்டுனராகப் பணியாற்றி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் ஒரு திருமண நிகழ்விற்காக சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இவருக்கு மூச்சுத் திணறலும், நெஞ்சுவலியும் ஏற்பட்டுள்ளது.
உடன் சென்றவர்கள் அவரை உடனடியாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை, அங்கிருந்த மருத்துவர்கள் வெகு துரிதமாக சிகிச்சையளித்து இரண்டு மணி நேரத்தில் அவரை இயல்பு நிலைக்கு மாற்றினர்.
இதற்கு நன்றி கூறுவதற்காக அவரது உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலனை சந்தித்தபோது அவர், ‘இங்கு வரும் எந்த ஒரு நோயாளியையும் இவர் உள்நோயாளி, இவர் புறநோயாளி என்ற பாகுபாடின்றி நமது வீட்டிற்கு வரும் விருந்தினரைப் போல நன்றாகக் கவனித்துக் கொள்கிறோம்.
மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் இம்மருத்துவ கல்லூரிக்கு பணிமாறுதலாகி வரும்போது முகப்புப் பகுதி உள்பட மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளுடன் வருபவர்கள் அமர்வதற்கு இருக்கைகள் இல்லாமலும், நோயாளிகளுக்கான படுக்கைகள் பற்றாக்குறையாகவும் இருந்தது. தற்சமயம் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி ஆகியோரின் உதவியுடன் புதிதாக நூறு படுக்கைகளும், கல்லூரி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அமர்வதற்கான இருக்கை வசதியும் ஏற்படுத்தி உள்ளேன்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும், கொரோனா நோய்த்தொற்று காலத்தில் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த நோய்த்தொற்று உள்ள மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் இருந்தது. அதற்காக என்னுடன் அயராது உழைத்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் நன்றிக்குரியவர்கள். இவர்களுடன் இணைந்து நான் பணியாற்றியது எனக்கு மிகப்பெரிய அகமகிழ்வைத் தந்துள்ளது’ என்று கூறினார்.
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று தற்சமயம் நலமுடன் இருக்கும் அப்துல் வாஹித் இது குறித்துக் கூறுகையில், ‘தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக அரசு மருத்துவக் கல்லூரியில் எனக்கு சிகிச்சையளித்தனர். பொதுவாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவர்கள், அறுவை சிகிச்சை போன்ற சூழ்நிலைகளில் நிவாரணம் பெற வேண்டி தத்தமது இறைவனை பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதைத்தான் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
ஆனால் இங்கு, நான் இயல்பு நிலைக்கு வந்த நிலையில் என்னை சந்தித்த சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதி, ‘இங்குள்ள நோயாளிகளுக்காகவும், எனக்காகவும், என் குடும்பத்தினருக்காகவும், இங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், அவர்களது குடும்பத்தினர் நலனுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று கூறியது எனக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
என்னைப் போன்ற அடித்தட்டு மக்கள் நோய் நொடிக் காலங்களில் ஏற்படும் இக்கட்டான சூழ்நிலையில் பணத்தை வீண்விரயம் செய்யாமல் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்திவரும் தமிழ்நாடு அரசு வழங்கும் அனைத்து மருத்துவ சலுகைகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என விரும்புவதாகக் கூறினார்.
இம்மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் டீன் ரேவதி பாலன் கடந்த காலங்களில் தூத்துக்குடி, விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் மருத்துவராகவும், மருத்துவமனை டீனாகவும் பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
– பாரூக், சிவகங்கை.