மயிலாடுதுறை வட்டம், செருதியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மகள் அபிராமி (25). இவர் மயிலாடுதுறை மூங்கில்தோட்டம், கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்த விஜயேந்திரன் – புஷ்பவல்லி தம்பதியினரின் மகன் வினோத்குமார் என்பவரை காதலித்து 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.
திருமணத்தின் பின்னர் கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி மற்றும் குடும்பத்தினர் அபிராமியிடம் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக, வினோத்குமாரை பிரிந்து சென்னை சென்று அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார் அபிராமி.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக கடந்த வாரம் மயிலாடுதுறை வந்த அபிராமி, குஞ்சிதபாதம் நகரில் உள்ள தனது தந்தையின் நண்பரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த வினோத்குமார் கடந்த 24ஆம் தேதி தனது தாய் புஷ்பவல்லி, புஷ்பவல்லியின் நண்பரான காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்,
புஷ்பவல்லியின் மருமகன் கார்த்திக், புஷ்பவல்லியின் மகள் திவ்யா ஆகிய 5 பேருடன் அங்கு சென்று அபிராமியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். அதற்கு அபிராமி மறுப்பு தெரிவித்ததால் ஐந்து பேரும் சேர்ந்து அபிராமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அபிராமி அளித்த புகாரின்பேரில் 5 பேரின் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் ராதாகிருஷ்ணன், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
– ராயல் ஹமீது.