கோவை மாநகர போலீசில், ஸ்டேஷனுக்கு 2 பேர் வீதம், 15 ஸ்டேஷன்களிலும் மகிழ்ச்சி அதிகாரிகள் (ஸ்டேஷன் ஹேப்பினெஸ் ஆபீசர்) நியமிக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் மன நலனை அலசி ஆராய்ந்து, ஆலோசனை வழங்கும் பொறுப்பு, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக மனநல தினம், நேற்று கோவை மாநகரில் வெவ்வேறு இடங்களில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கோவை மாநகர போலீஸ் சார்பில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு கமிஷனர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
போலீசார் மட்டுமின்றி, கொலைக்குற்றங்கள், பாலியல் குற்றங்கள், தற்கொலைகள், சாலை விபத்து சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களுக்கு மன நலம் தொடர்பாக, பயிற்சி பெற்ற நிபுணர்கள் ஆலோசனை வழங்கினர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
கோவை மாநகரில் செயல்படும், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும், தலா இருவர் மகிழ்ச்சி அதிகாரிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர். குறிப்பிட்ட சில குணநலன்களின் அடிப்படையில், இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், ஸ்டேஷனில் பணியாற்றும் ஒவ்வொரு போலீஸ்காரரின் மனநலனையும் பேணி பாதுகாப்பதில் கமிஷனரின் பிரதிநிதியாக செயல்படுவர். போலீசார் இடையே நிலவும், மனநலம் தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆலோசனை வழங்கி அவர்களுக்கு உதவியாக இருந்து வருவர். இது தொடர்பாக, மகிழ்ச்சி அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
மகிழ்ச்சி அதிகாரியின் டூட்டி
கோபம் வருவதை கட்டுப்படுத்த முடியாத போலீசார், பொதுமக்களிடம் பண்பாக பேசுவதில் பிரச்னை உள்ளவர்கள் மற்றும் மன நலம் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோரை மகிழ்ச்சி அதிகாரிகள் கண்டறிவர். அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்வர். தேவைப்பட்டால், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், ஆலோசனைகள் வழங்கப்படும். கண்டறியப்பட்ட ஒவ்வொருவரும், மனநலம் தொடர்பான பிரச்னைகளில் இருந்து முழுமையாக விடுபடும் வரை, தொடர்ந்து ஆலோசனை வழங்கப்படும்.
இவ்வாறு, கமிஷனர் தெரிவித்தார்.
மன அழுத்தத்தை மேலாண்மை செய்வது தொடர்பாக, போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் வகையில், கமிஷனர் அலுவலகத்தில் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள், குற்றத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்பில் இருந்து, முழுமையாக விடுபடுவதற்கு வசதியாக, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மன நல ஆலோசனை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.