மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேல நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த தவமணி என்பவரது மகன் ரகு(33). கடந்த 2018 ஆம் ஆண்டு ரகுவுக்கு திருமணம் முடித்த நிலையில் குழந்தைகள் ஏதும் இல்லை. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவரது மனைவி இறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. ரகு சென்னையில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவர், மனைவி இறந்த துக்கத்தில் தொடர்ந்து இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக ரகு, குடிக்க ஆரம்பித்ததாகத் தெரிகிறது. நேற்று மாலை சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரிக்கு வந்த ரகு, பெரியாறு நீட்டிப்பு கால்வாய் அருகே இருக்கும் ஒரு மதுபான கடைக்குச் சென்று மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.
இரவு சுமார் 11 மணியளவில் தனது இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து கிளம்பிய ரகு, பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் கரையில் இருக்கும் தார் சாலையில் வந்துள்ளார். குடிபோதையில் நிதானம் இழந்திருந்த அவர், ஒரு திருப்பத்தில் தனது இருசக்கர வாகனத்தோடு கால்வாய்க்குள் சென்று விழுந்திருக்கிறார். இரவு நேரம் என்பதால் அவர் கால்வாய்க்குள் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை.
காலை நேரத்தில் அந்த வழியே வந்த சிலர் கால்வாய்க்குள் இருசக்கர வாகனத்தோடு ஒரு நபர் கிடப்பதை கண்டு உடனடியாக சிங்கம்புணரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ரகுவின் உடலைக் கைப்பற்றி, சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சிங்கம்புணரி நகர எல்லைக்கருகே, இரண்டு மதுபான கடைகள் பெரியாறு நீட்டிப்புக் கால்வாயின் கரையிலேயே அமைந்துள்ளன. அங்கு குடித்துவிட்டு, தங்களது இருசக்கர வாகனத்தில் கால்வாய் கரையில் பயணிக்கும் குடிமகன்கள் கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது.
ஏராளமான விபத்துக்கள் காவல்துறையினரின் கவனத்திற்கு வராமல் உள்ளதாகவும் தெரிகிறது. மனித உயிர்களை மலிவாக நினைக்காமல் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்நிலையை மாற்ற தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.