கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் போகிறது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில், பரிசோதனை முயற்சிகளை கைவிட்டு, போக்குவரத்து சீராக்கும் நடவடிக்கையை மட்டும் போலீசார் மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகரில் உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம் வரை, உயர் மட்டப்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கென பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அனைத்தும், புட்டுவிக்கி சாலை வழியாக திருப்பி விடப்பட்டிருந்தன.
இலகு ரக வாகனங்கள் மட்டுமே கரும்புக்கடை வழியாக சென்று, வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், 15 நாட்களுக்கு முன்னதாக, போக்குவரத்து போலீசார், புட்டுவிக்கி சாலையில் சென்று கொண்டிருந்த பஸ், லாரிகளையும் கரும்புக்கடை வழியாக செல்வதற்கு அனுமதி வழங்கி விட்டனர். தற்போது கரும்புக்கடையிலும், ஆத்துப்பாலத்திலும் பாலம் கட்டும் பணி முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில், இப்படி பஸ்களை திருப்பி விட்டது நெரிசலை அதிகரித்துள்ளது.
கரும்புக்கடையை கடந்து செல்வதற்கு வாகன ஓட்டிகள் போராட வேண்டியுள்ளது. பொள்ளாச்சி சாலையில், குறிச்சி குளம் வரையிலும், பாலக்காடு சாலையில் குனியமுத்துார் வரையிலும் வாகனங்கள் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுகிறது. இதேபோல, மேட்டுப்பாளையம் சாலையிலும் போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ள மாற்றங்களால், வாகனங்கள் நீண்ட துாரத்துக்கு காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. பெட்ரோல் விற்கும் விலையில், வேகாத வெயிலில் சாலையில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் புலம்பித் தவிக்கின்றனர்.
தீபாவளி நெருங்க நெருங்க மாநகரில் வாகன போக்குவரத்து அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம். இத்தகைய சூழலில், போக்குவரத்து போலீசார், பரிசோதனை முயற்சிகளை கைவிட்டு, வாகன போக்குவரத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணன் கூறியதாவது: Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ புட்டுவிக்கி சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படுவதால் பள்ளி செல்வதற்கும், வீடு திரும்புவதற்கும், தேவையற்ற தாமதம் ஏற்படுவதாக, பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து புகார்கள் அளிக்கப்பட்டன. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. எனவே பரிசோதனை முயற்சியாக, பஸ்களை கரும்புக்கடை வழியாக இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில், வாகன போக்குவரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகள், ஒரு வரிசைக்கு மூன்று வரிசைகளில் காத்திருப்பதை காண முடிகிறது. அதிகரித்த வாகன போக்குவரத்தை சரியாக நிர்வகிக்க வேண்டும் என்பதற்காகவே, சில மாற்றங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு, துணை கமிஷனர் தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்டட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.