கோவை: மத்திய அரசின் பி.எல்.ஐ 2.0 திட்டத்தை தமிழக ஜவுளித்துறை பயன்படுத்திக்கொண்டு ஊக்கத்தொகையை பெற்று தொழில் வளத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் கன்வீனர் பிரபுதாமோதரன் கூறியதாவது:
“இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் ஆண்டுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்து வருகின்றனர். பெரிய அளவிலான உற்பத்தி, போட்டியிடும் திறன் மற்றும் மதிப்பு கூட்டு பொருட்களை தயாரித்து அதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான முயற்சியாக மத்திய அரசு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறாது என்ற கருத்து எழுந்தது. இதனிடையே பி.எல்.ஐ 2.0 என்ற திட்டத்திற்கான வரைவை மத்திய அரசு கொடுத்துள்ளது. இதற்காக ரூ.4 அயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் ஜவுளித்துறையையும் இணைத்துள்ளது.
இதன் மூலமாக ரூ.15 கோடி முதலுடன் தொழில் தொடங்குவோர் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை அபிவிருத்தி செய்வோர் ஆண்டுக்கு ரூ.30 கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு 8 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மேலும், ரூ.30 கோடி முதலுடன் தொழில் தொடங்குவோர் அல்லது ஏற்கனவே உள்ள தொழிலை அபிவிருத்தி செய்வோர் ஆண்டுக்கு ரூ.60 கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு 9 சதவீதமும், ரூ.45 கோடி முதலுடன் தொழில் தொடங்குவோர் ஆண்டுக்கு ரூ.90 கோடி வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவர்களுக்கு 10 சதவீதமும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
முன்னதாக இந்த திட்டத்தில் தமிழகத்தில் இருந்து 6 முதல் 7 நிறுவனங்கள் மட்டுமே இணைந்தன. இந்த இரண்டாவது திட்டத்தில் தொழில் நிறுவனங்கள் இணைவது எளிமையாக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக ஜவுளித்துறை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்கள் இதற்கு தகுதி பெற்றுள்ளன.
இந்த திட்டத்தை ஜவுளித்துறை பயன்படுத்திக் கொள்வதன் மூலமாக ஏற்றுமதியை நாம் அதிகரிக்க முடியும். மேலும், ரூ.1 லட்சம் கோடிக்கு அதிகமான புது உற்பத்தி கிடைக்கும். கோவை உள்ளிட்ட மேற்குமாவட்டங்களில் மட்டும் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மேலும், தொழில்துறையினருக்கு ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி என்ற நிறுவனத்துடன் இணைந்து எங்கள் அமைப்பு உறுப்பினர்களுக்கு வழிகாட்டுதலையும் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.
இந்த வரைவு குறித்து தொழில்துறையினரின் ஆலோசனைகளை மத்திய அரசு கேட்டுள்ளது. இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். எங்கள் அறிக்கையை மத்திய அமைச்சரிடம் வழங்க உள்ளோம்.” இவ்வாறு அவர் கூறினார்.
– சீனி, போத்தனூர்.