சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் அமைந்துள்ள மருதுபாண்டியர்கள் நினைவுத்தூண் மற்றும் மணிமண்டபம் பகுதிகளில் தென் மண்டல காவல்துறை தலைவர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மருது சகோதரர்கள் என அழைக்கப்படும் சின்னமருது மற்றும் பெரிய மருது இருவரும் ஆங்கிலேயர்களால் 1801ஆம் ஆண்டு திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டார்கள். எனவே, திருப்பத்தூரில் அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி மருது பாண்டியர்களின் நினைவு தினம் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் அக்டோபர் 24ல் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 221ஆவது நினைவு நாள் அனுசரிக்கப்பட உள்ளது.
மருது சகோதரர்களின் நினைவு நாளில் அவர்களது மணிமண்டபத்திற்கு ஏராளமான அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் வருகை தந்து மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைகள் மற்றும் நினைவுதூணுக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்த உள்ளார்கள். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு பணியில் ஈடுபடுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு நடைபெற உள்ள நினைவு நாளையொட்டி தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்று மருது பாண்டியர்களின் நினைவு விழா வருவதால் கூடுதல் பாதுகாப்பு அளிப்பது அவசியமாக உள்ளது. எனவே, தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் மருதுபாண்டியர்கள் மணி மண்டபம் மற்றும் நினைவுத் துண் அமைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமாரிடம் நிகழ்ச்சி குறித்து கேட்டறிந்தார். பின்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை துணைத் தலைவர் மயில்வாகனனிடம் ஆலோசனையில் ஈடுபட்டார். நிகழ்ச்சியின்போது திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் உள்ளிட்ட காவல்துறையினர் உடன் இருந்தனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.