தனது தாத்தாவின் இறுதிச்சடங்கிற்காக வாங்கிய 1500 ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத 22 வயது இளைஞரை கைகளில் கயிற்றைக் கட்டி பைக்கில் 2 கி.மீ இழுத்துச் சென்ற கொடூரச் செயல் ஒடிசாவில் நடைபெற்றுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒடிசா மாநிலம், கட்டாக் நகரைச் சேர்ந்தவர் ஜெகநாத் பெஹரா(22). இவரது தாத்தா சில நாட்களுக்கு முன் இறந்து விட்டார். அவரது இறுதிச்சடங்கிற்காக இரண்டு பேரிடம் 1500 ரூபாயை ஜெகநாத் பெஹாரா கடன் வாங்கியுள்ளார். இந்தப் பணத்தை 30 நாட்களுக்குள் திரும்பத் தருவதாக அவர் கூறியிருந்தார். ஆனால், அவரால் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், பணம் கொடுத்தவர்கள் ஜெகநாத் பெஹராவின் கைகளை 12 அடி நீள கயிற்றால் கட்டினர். அதன் மறுமுனையை இரு சக்கர வாகனத்தின் பின்புறம் கட்டினர். ஸ்டூவர்ட்பட்னா சதுக்கத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுதாஹத் சதுக்கம் வரை சுமார் 20 நிமிடங்களுக்கு ஜெகநாத் பெஹாராவை பைக்கில் நேற்று இழுத்துச் சென்றனர். இதை சாலையில் நின்ற காவல்துறையினரும் வேடிக்கை பார்த்துள்ளனர்.
ஆனால், சிலர் சுதாஹத் சதுக்கத்தில் கயிற்றில் கட்டிச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி ஜெகநாத் பெஹாராவை மீட்டனர். இந்நிலையில், பைக்கில் ஜெகநாத் பெஹராவை கட்டி இழுத்துச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து ஜெகநாத்தை கட்டி இழுத்துச் சென்ற இருவரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் பயன்படுத்திய பைக், கயிறு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இப்பிரச்சினை தொடர்பாக சிறை வைத்தல், கடத்தல் மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாக கட்டாக் நகர காவல்துறை துணை ஆணையர் பினாக் மிஸ்ரா கூறியுள்ளார். 2 கி. மீ தூரத்திற்கு ஒருவரை பைக்கில் இழுத்துச் செல்லும் போது அப்பகுதியில் பணியாற்றிய போக்குவரத்து காவலர்கள் ஏன் தடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவதாகவும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– ராயல் ஹமீது.