
தூத்துக்குடி அருகே மயானத்திற்கு பாதைகேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள மேல வேலாயுதபுரத்தை சேர்ந்த அழகம்மாள் (85) என்ற மூதாட்டி நேற்று இறந்துவிட்டார். அவரது உறவினர்கள் அழகம்மாளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து முடித்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது இந்த வழியாக சடலத்தை கொண்டு செல்லக்கூடாது இந்த இடம் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுடுகாட்டுக்கு செல்ல முறைப்படி பாதை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, இறந்தவரின் உறவினர்கள் சுமார் 50 பேர் புதியம்புத்தூர்-தூத்துக்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து ஒட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, புதியம்புத்தூர் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது தொடர்பாக ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டு மயான பாதைக்கு ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-முனியசாமி ஓட்டப்பிடாரம்.












