வ.உ.சி பூங்காவில் வ.உ.சிதம்பரனார் சிலை அமைய உள்ள இடத்தினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று பார்வையிட்டார். அமைச்சர் சாமிநாதனுடன் கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், மேயர் கல்பனா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், “வ.உ.சி சிலை கோவையில் அமைக்கப்படும் என முதல்வர் சட்டமன்றத்தில் அறிவித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது இடம் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், 40 லட்சம் மதிப்பில் சிலை அமைக்கப்படும்” என தெரிவித்தார்.
மேலும், “கோவை மாநகராட்சியிலும் சிலை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவைக்கும் வ.உ.சிதம்பரனாருக்கும் நீண்ட தொடர்பு உண்டு. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அரசு கட்டிடங்களுக்கு வ.உ.சி பெயர் வைக்கப்பட இருக்கிறது. வ.உ.சி வீட்டில் ஒளி, ஒலி காட்சி அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.
தொடர்ந்து, “உச்சநீதிமன்றம் சிலைகளை சாலைகளில் இருந்து பூங்காக்களுக்கு மாற்ற அறிவுறுத்தி இருக்கிறது. இனிமேல் வைக்கப்படும் சிலைகளை மட்டும் பூங்காவில் வைக்க நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறோம். மேலும் 3 மாத காலத்தில் கோவையில் வ.உ.சி சிலை அமைக்கப்படும்” எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பத்திரிகையாளர் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையில் உள்ள விதிமுறைகளை தளர்த்தவும், பத்திரிகையாளர் அனைவரும் நலவாரியத்தில் உறுப்பினராக இணைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் அமைச்சர் சாமிநாதனிடம் மனு அளித்தனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.