சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள பிரான்மலை மதகுபட்டியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 45). இவரது மனைவி சபிதா (39). சபிதா பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
பிரான்மலையில் உள்ள, ராமகிருஷ்ணனுக்குச் சொந்தமான வயலில் தற்போது விவசாயப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக நேற்று மாலை 7 மணியளவில் மின்மோட்டாரை இயக்க அங்கு சென்ற சபிதா மின்சாரம் தாக்கி இறந்து கிடந்துள்ளார்.
உடனடியாக அவரது கணவர் ராமகிருஷ்ணன், அவரைத் துாக்கிக்கொண்டு சிகிச்சைக்காக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளார். அங்கு சபிதாவை பரிசோதித்த மருத்துவர்கள் சபிதா ஏற்கனவே இறந்துவிட்டாதகக் கூறியுள்ளார்கள்.
தகவலறிந்து மருத்துவமனை வந்த எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் சபிதாவின் உடலை, உடற்கூறாய்விற்காக கைப்பற்றினர்.
இதுகுறித்து எஸ்.வி.மங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அனுமதி இல்லாமல் மின் வேலி அமைக்க முற்பட்டதால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் எனக்கூறி, சபிதாவின் கணவர் ராமகிருஷ்ணன் மீது மின்வாரியத்தின் சார்பில் எஸ்.வி.மங்கலம் காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சபிதாவிற்கு ராம்பிரசாத் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் ஈரோட்டில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.