தூத்துக்குடியில் இடிந்து விழுந்து அயாய நிலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு அமைப்பாளர் இ.அதிசயகுமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அனுப்பியுள்ள மனுவில் “தூத்துக்குடி மாநகரத்தில் 1938 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து சுமார் 84 ஆண்டுகள் கடந்து விட்டன. இக்கட்டிடத்தின் கிழக்குப் பகுதியில் இரண்டாவது தளத்தில் நில மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றமும், முதல் தளத்தில் தலைமை குற்றவியல் நீதிமன்றமும், கீழ்த்தளத்தில் நீதித்துறை நடுவர் எண் 2 மற்றும் 3 நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 2021ஆம் ஆண்டு பெய்த மழையில் இக்கட்டிடங்கள் பலவீனமடைந்து, மேற்படி கட்டிடங்களில் இரண்டாவது தளத்தில் உள்ள மேற்கூரை கான்கிரீட்டுகள் பெயர்ந்து இடிந்து விழுந்ததினால் இத்தளத்தில் செயல்பட்டு வந்த நில மோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றமும், அதன் அலுவலகமும், நீதிபதி அறையும் உடைய இரண்டாவது தளமானது மூடி சீல் வைக்கப்பட்டு அப்பகுதியில் யாரும் செல்லக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
மேற்படி நீதிமன்றங்களில் முதல் தளத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றம் செயல்பட்டு வரும் இடத்திற்கு மேல் பகுதியில் உள்ள மாவட்ட கூடுதல் நீதிமன்றம் எண்.2 நீதிமன்றத்திற்கு செல்வதற்கு ஒரு தனி வழி உள்ளது. இவ்வழியில் உள்ள மேற்கூரைகளின் கான்கிரீட் ஆனது இடிந்து விழுந்ததினால் இவ்வழியும் அடைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது தளமானது முழுவதுமாக அடைக்கப்பட்டும், முதல் தளத்திலிருந்து மாவட்ட கூடுதல் நீதிமன்றத்திற்கு செல்லும் வழி அடைக்கப்பட்ட நிலையிலும் மேற்படி கட்டிடத்தின் பல பகுதிகள் விரிசல்கள் ஏற்பட்டும் கான்கிரீட்டுகள் இடிந்து விழுந்து வருவதினாலும் இந்த நீதிமன்ற கட்டிடம் அபாயகரமான நிலையில் உள்ளது.
இந்த நீதிமன்றங்களில் வழக்காடிகளும், வழக்கறிஞர்களும், அலுவலகப் பணியாளர்களும், நீதிபதிகளும் தினசரி அவர்களது பணியின் காரணமாக இக்கட்டிடத்திற்குள் சென்று வருவதினால் பலவீனம் அடைந்த இக்கட்டிடமானது ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மேற்படி நீதிமன்ற கட்டிடத்தில் உறுதித்தன்மையை மதிப்பீடு செய்யும் வரை இக்கட்டிடத்தில் இயங்கி வரும் மேற்படி நீதிமன்றங்களை மூடி சீல் வைத்து புதிய கட்டிடத்திற்கு மாற்ற செய்ய வேண்டியது அவசியமாகின்றது.
ஆகவே கனம் மதிப்பிற்குரிய மாண்புமிகு. நீதியரசர் அவர்கள், ஒருங்கிணைந்த நீதிமன்ற பழைய கட்டிடமானது பலவீனமடைந்ததற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தெரிவதினால் இக்கட்டிடத்தின் உறுதித்தன்மையை மதிப்பீடு செய்து இக்கட்டிடங்களில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்களை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும்படி மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் அரசு இதனை செய்து தரும் வேண்டும் என்று பொதுமக்களும் கோரிக்கை.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.