கோவை, கங்கா மருத்துவமனையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கோவை சாய்பாபா காலனி பகுதியில் கங்கா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனயில் ஜான்சன் & ஜான்சன் மெட்டெக் இந்தியா மற்றும் கங்கா மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் இணைந்து கலந்தாய்வு அமர்வை நடத்தினர்.
இது தொடா்பாக மருத்துவமனை இயக்குநா் ராஜசேகரன் கூறியதாவது:
கங்கா மருத்துவமனையில் ஆண்டுக்கு 150க்கும் மேற்பட்ட மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை உள்பட 2,500 மூட்டு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கீழ்வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம்.
இந்நிலையில் ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகத் துல்லியமாக, குறுகிய காலத்தில் சிகிச்சை அளிக்க முடியும். இந்த முறை மூலம் மூட்டுகள் வேகமாக மறு சீரமைக்கப்படுகின்றன. நோயாளிகள் விரைவாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும்.
உலக அளவில் பல்வேறு ரோபோட்டிக் சிகிச்சை முறைகள் உள்ள நிலையில், வெலிஸ் ரோபோவை தோ்வு செய்துள்ளோம். ஆசியாவிலேயே முதல் முறையாக வெலிஸ் ரோபோ சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளோம். வெலிஸ் ரோபோட்டிக் தொழில்நுட்பமானது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது.
இதனை கணினி மூலம் எளிதாக கையாள முடியும். இதனால் சிடி ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும் தேவையில்லாத கதிரியக்க சிகிச்சைகளும் மேற்கொள்ள வேண்டியதில்லை.
இதில் உள்ள புரோஅட்ஜெஸ்ட் மென்பொருள் மென்மையான திசு சமநிலையை அனுமதிக்கிறது. அக்யூபேலன்ஸ் எனும் மென்பொருள் நோயாளியின் முழங்கால் இயக்கத்தின் முழு அளவிலான மூட்டு சமநிலையை காட்சிப்படுத்துகிறது. இந்த சிகிச்சை நோயாளிக்கு சிறப்பான பலனை தருகிறது என தெரிவித்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.