சிங்கம்புணரி அருகே உடல்நலமில்லாத 5 வயது மகளைக் கொன்றுவிட்டு, தாய் தற்கொலை!
சிங்கம்புணரி அருகே உள்ள அரசினம்பட்டியில் வசித்து வருபவர் ஜெயராஜ். இவரது மனைவி சங்கீதா(24).
ஜெயராஜ் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். திருமணமாகி 6 வருடங்கள் ஆன சங்கீதா – ஜெயராஜ் தம்பதியினருக்கு, பிரகன்யா என்ற 5 வயதுடைய மகள் உள்ளார்.
குழந்தை பிரகன்யா பிறக்கும்போதே உடலில் சில குறைபாடுகளுடன் பிறந்த காரணத்தால் தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. எனவே, ஒவ்வொரு மாதமும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சென்று, குழந்தைக்கு மருத்துவம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலை குழந்தையை சிகிச்சைக்காக மதுரைக்கு அழைத்துச் செல்வது சம்பந்தமாக கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு சங்கீதா மன வருத்தத்துடன் இருந்துள்ளார். ஜெயராஜ், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலத்திற்கு பணி நிமித்தமாக சென்று விட்டு மாலை 7 மணிக்கு திரும்பியிருக்கிறார். அப்போது வீடு உள்புறமாகப் பூட்டிய நிலையில் இருந்துள்ளது. நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் பக்கத்தில் விசாரித்து விட்டு, சன்னல் கண்ணாடியை உடைத்துப் பார்த்தபோது சங்கீதா தூக்கு மாட்டிய நிலையிலும், குழந்தை பிரகன்யா துண்டால் கழுத்து இறுக்கப்பட்டும் இறந்த நிலையில் கிடந்துள்ளார்கள்.
உடனடியாக ஜெயராஜ் சிங்கம்புணரி காவல்நிலையத்திற்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், சிங்கம்புணரி காவல்துறையினர் விரைந்து வந்து இரு சடலங்களையும் கைப்பற்றி, சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் சங்கீதா தனது மகள் பிரகன்யாவை துண்டால் கழுத்தை இறுக்கி கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த உறவினர்கள் கதறியழுத வண்ணம் உள்ளனர். மேலும் கிராம மக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு வருகை தந்த தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியர் விசாரணையை துவக்கியுள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
மேலும் படிக்கவும்:
சிங்கம்புணரி அருகே பிரான்மலை உச்சியில் வழி தவறிய இளைஞர்!
நீண்ட தேடலுக்குப் பின் பத்திரமாக மீட்ட கிராம இளைஞர்கள்! 👇