தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய தொழிலான உப்பு உற்பத்தி பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு தமிழகத்தின் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் உப்பை இறக்குமதி செய்வதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்புக்கு விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு சுமார் 45,000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. ஆண்டிற்கு சுமார் 20 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. உப்பு தொழிலை நம்பி ஆயிரக்கணக்கான உப்பு உற்பத்தியாளர்களும் சுமார் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆண் பெண் உப்பள தொழிலாளர்களும் உள்ளனர்.
ஆண்டு தோறும் ஜனவரி 15 முதல் செப்டம்பர் மாதம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இல்லாத காரணத்தால் வழக்கமான ஜனவரி மாதத்தில் உப்பு உற்பத்தி துவங்கியது. ஆனால் ஜனவரி மாத கடைசி மற்றும் பிப்ரவரி மாதத்தில் பருவ மழை இல்லாத காலத்தில் பருவம் தவறி பெய்துவரும் மழை காரணமாக உப்பள பார்த்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உட்பள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்மேலும் தற்போது பெய்த மழை காரணமாக புதிய உப்பு டன் 2200 வரையும் பழைய உப்பு டன் 3200 வரையும் உப்பு உற்பத்தியாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு ரயில் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள கோழி தீவனப் பண்ணைகள் மற்றும் சாயப்பட்டறைக்காக சுமார் 1250 டன் உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குஜராத் மாநிலத்திலிருந்து மிகக் குறைந்த விலைக்கு தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் நிர்ணயத்துள்ள விலையை விட மிக குறைவாக ஒரு டன் உப்பு 1500 முதல் 1800 ரூபாய் வரை குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. முன்பு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு உணவுக்கு பயன்படும் உப்பு மற்றும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய உப்பு அதிக அளவில் அனுப்பப்பட்டு வந்தது.
சில ஆண்டுகளாக தமிழ்நாடு இல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கும் குஜராத் மாநிலத்திலிருந்து உப்பு இறக்குமதி செய்யப்பட்டது. இதன் காரணமாக தூத்துக்குடி உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்திலும் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தக்கூடிய உப்பு குஜராத் மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தூத்துக்குடி மாவட்ட உப்பையே தமிழகம் முழுவதும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் மாநிலத்திலிருந்து வருங்காலங்களில் அதிக அளவு உப்பு இறக்குமதி செய்யப்பட்டால் தூத்துக்குடி மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் மட்டுமல்லாது உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குஜராத் மாநிலத்தில் உப்பு உற்பத்தியாளர்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படுவது போலவும் உப்பு ஏற்றுமதி செய்ய ரயில்களில் கட்டணச் சலுகை வழங்குவது போல் தமிழகத்திலும் உப்பு உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு சலுகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் முன்பு இருந்தது போன்ற ஜோனல் சிஸ்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.