கோவை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிக பணிகள் நடைபெற்ற ஆர். எஸ். புரம் பகுதியில் உள்ள நடைபாதையை மறித்து குப்பைகள் குவியலாக கொட்டப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்மார்ட் சிட்டியான கோவையில் குளக்கரைகள் புனரமைப்பு, பூங்காக்கள் அமைத்தல், சாலைகளில் எல். இ. டி திரையுடன் கூடிய வண்ண விளக்குகள் அமைத்தல், பொதுமக்களுக்கு அழகிய நடைபாதைகள், மீடியா டவர் என பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்றுள்ளன.
குறிப்பாக ரேஸ்கோர்ஸ் பகுதியிலும், ஆர். எஸ். புரம் பகுதியிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றன இதில் ஆர். எஸ். புரம் டி. பி சாலை மாடல் சாலையாக அறிவிக்கப்பட்டு நடைபாதைகள் அடேங்கப்பா என்று கூறும் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. டி. பி சாலை அழகிய ‘க்ளாக் டவரும்’ அமைக்கப்பட்டது.
டி. பி. சாலை வழியாகச் சென்றாலே இது கோவை தானா என்று வியக்கும் அளவுக்கு மாதிரி சாலை மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த க்ளாக் டவரில் இருந்து கிழக்கு டி. வி சாமி சாலையிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த நடைபாதையில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதிக அளவில் குப்பைகள் தேங்கி அந்த நடைபாதை மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறியுள்ளது. ஒரு பக்கம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரை அழகுபடுத்தும் மாநகராட்சி, சுகாதாரம் தொடர்பான விஷயத்தில் கோட்டை விடுவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.