திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், மாராடி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின் என்பவரின் மனைவி சத்யா (வயது 35). இவருக்கு மாராடி கிராமத்தில் அரசு வழங்கும் இலவச வீட்டு மனைப் பட்டா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சத்யாவுடன் சேர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட மொத்தம் 138 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்வு கடந்த 22.8.2023 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அன்றைய தினம் மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா பெற முடியாத காரணத்தால் சத்யா மறுநாள் 23.8.23 அன்று கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று, அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் சுமதி என்பவரிடம் தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டு மனையின் பட்டாவை தனக்குத் தருமாறு கேட்டுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதி (வயது 34) பத்தாயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் மட்டுமே உங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க முடியும் எனக் கூறியுள்ளார். இந்தத் தகவலை சத்யா, தனது கணவர் அஸ்வினிடம் தெரியப்படுத்தியபோது அவர், யாருக்கும் பணம் தராமல் பட்டா பெற்று வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக சத்தியா மீண்டும் 29.8.23 அன்று மாராடி கிராம நிர்வாக அலுவலர் சுமதியை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனது வீட்டுமனை பட்டாவை கொடுக்குமாறு மீண்டும் கேட்டுள்ளார்.
அதற்கு கிராம நிர்வாக அலுவலர் சுமதி, தான் ஏற்கனவே கேட்டிருந்த பத்தாயிரம் ரூபாயில் 3000 ரூபாய் குறைத்துக் கொண்டு 7000 ரூபாய் கொடுத்தால் மட்டுமே வீட்டுமனை பட்டாவை வழங்க முடியும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சத்யா, திருச்சியில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் அளித்த புகாரின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் ஆலோசனையின் பேரில் மாராடி கிராம நிர்வாக அலுவலர் சுமதியை, நேற்று மதியம் சந்தித்த சத்யா, அவரிடம் 7000 ரூபாய் லஞ்சமாகத் தந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சுமதியை கையும் களவுமாகப் பிடித்து, தீவிர விசாரணைக்கு பின் அவரை கைது செய்தனர்.
– பாரூக்.