கோவை மாவட்டம் அன்னூர் பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண், இவருடைய செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில் ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலையில் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே அவர் அதில் இருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய நபர் ஆன்லைனில் வேலை உள்ளது. அதற்காக டெலிகிராம் குரூப்பில் சேர வேண் டும் என்று கூறினார்.
அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததும் டெலிகிராம் குரூப்பில் இணைந்தார். அதைத்தொடர்ந்து பேசிய அவர்கள், அந்த இளம் பெண்ணிடம் நாங்கள் தினமும் ஒரு டாஸ்க் கொடுப்போம் அதற்கு நீங்கள் பதிலளித்து பணம் செலுத்தினால் அதிகளவில் வருமானம் கிடைக்கும் என்று கூறினார்கள். இதையடுத்து அவர் முதலில் ரூ. 1000 செலுத்தினார் பிறகு அந்த இளம் பெண் பல்வேறு பரிமாற்றம் மூலம் ரூ. 6 லட்சத்து 16 ஆயிரத்து 239-ஐ அனுப்பினார்.
ஆனால், அதற்கான லாப தொகையை கொடுக்கவில்லை அத்துடன் அந்த பணத்தையும் திரும்ப கொடுக்காமல் மோசடி செய்துவிட்டனர். இது குறித்து அந்த இளம்பெண் அளித்த புகாரின் பேரில் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.