‘பட்டியலினத்தை சேர்ந்த பெண் சமைக்கும் உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிடாது’ சாதீய வன்மத்துடன் பெற்றோர்கள் அடாவடி, மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை – கரூரில் பரபரப்பு!!

கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 77 தொடக்கப் பள்ளிகளில் சோதனை அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு பல்வேறு ஆய்வுக்குப் பின்னர் தற்பொழுது செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் காலை சிற்றுண்டி உணவு திட்டம், மாவட்டம் முழுவதும் சுமார் 705 மையங்களில் பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமாக கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களில் சுமார் 29 ஆயிரத்து 449 மாணவ மாணவிகள் காலை சிற்றுண்டி திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.

இதனை கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு துவக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து தினந்தோறும் ஆய்வு நடத்தி வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலன்செட்டியூர் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆய்வு நடத்தினார்.

அப்போது காலை சிற்றுண்டி உணவு மீதம் இருப்பது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் சமையலரிடம் கேட்டறிந்த போது, அங்கு படிக்கும் மாணவர்கள் பாதிக்கு மேல் காலை சிற்றுண்டி சாப்பிடுவதில்லை என்றும் அந்த மாணவர்களின் பெற்றோர் ஊர் கூட்டத்தில், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த சுமதி என்ற பெண்மணி சமையல் செய்வதால், அதனை யாரும் சாப்பிடக்கூடாது என சாதிய பாகுபாடு நோக்கத்தோடு முடிவு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

இதுகுறித்து, உணவு அருந்தாத 15 பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் விசாரணை நடத்திக் கொண்டிருக்கையில், ‘பாலசுப்பிரமணியம்’ என்ற நபர் அருந்ததியர் சமூகத்தை சார்ந்த பெண் சமைத்தால் மற்ற சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் உணவு உட்கொள்ள மாட்டார்கள். மீறி சமைத்து பரிமாறினால், பள்ளியில் பயிலும் 15 மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ் பெற்று வேறு பள்ளிக்கு செல்வோம் என மாவட்ட ஆட்சியரிடம் அடாவடி தோரணையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கரிடம் சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசியதாக பாலசுப்பிரமணியை அரவக்குறிச்சி போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் காலை உணவை உண்ணாத 15 குழந்தைகளின் 10 பெற்றோர்களை விசாரணை செய்தபோது, பாலசுப்பிரமணியம் என்பவர் அருந்ததியர் பிரிவு பெண் சமைத்தால் தம்முடைய குழந்தை உணவு உண்ணாது என்றும் வேண்டுமென்றால் குழந்தையின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்ததையொட்டி, அவர்மீது மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, பாலசுப்பிரமணியன் தனது குழந்தையும் காலை உணவை உண்ண சம்மதிக்கிறேன் என மன்னிப்பு கோரியதின் அடிப்படையில், அவர்மீது வழக்கு தொடுக்கப்படாமல் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். மேலும், மீதமுள்ள அனைத்து பெற்றோரும் தங்களது பிள்ளைகளை தொடர்ந்து காலை உணவு உண்ண ஏற்பாடு செய்யப்படும் என கேட்டுக்கொண்டார்கள்.

இதனையடுத்து, “பள்ளிகளில் எவ்வித பாகுபாடும் காட்டக் கூடாது. இது தொடர்ந்து கண்காணிக்கப்படும்” என்று அனைவருக்கும் அறிவுரையையும், எச்சரிக்கையையும் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வழங்கினார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சாதிய பாகுபாடு காட்டும் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இந்த ஆய்வின் போது, மகளிர் திட்ட இயக்குனர் சீனிவாசன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கரூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வில் காலை சிற்றுண்டி திட்டத்தில் பட்டியலின பெண் உணவு தயாரித்ததால், உணவு சாப்பிட கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்ததாக கூறப்படும் சம்பவம் கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-தமிழரசன், மேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp