விநாயகர் சிலை ஊர்வலத்தில் விபரீதம்! இளைஞர் மீது கொலை வெறித் தாக்குதல்!
செங்கல்பட்டு அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தில், பட்டாசு வெடிக்கக்கூடாது எனக்கூறிய இளைஞரை, செங்கற்களால் அடித்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பொத்தேரியில் உள்ள வினை தீர்த்த விநாயகர் ஆலயத்தில், மேளதாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து விநாயகர் ஊர்வலம் நடத்தப்பட்டது. ஊர்வலம் பஜனை கோயில் அருகே வந்தபோது இளைஞர்கள் பட்டாசு வெடித்துள்ளனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், தனது வீட்டின் அருகே பட்டாசு வெடிக்கக் கூடாது எனக் கூறியுள்ளார். இதனால் ஊர்வலத்தில் வந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து அருகில் கிடந்த செங்கற்களை எடுத்து கார்த்திக்கை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், கார்த்திக்கை தாக்கிய இளைஞர்களை தடுத்து நிறுத்தினர். தாக்குதலில் படுகாயமடைந்த கார்த்திக், தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மறைமலைநகர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கார்த்திக்கை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த ராகேஷ், சுரேஷ், நவீன் உள்ளிட்ட இளைஞர்கள் என தெரியவந்தது.
அவர்களுக்கும், கார்த்திக்கிற்கும் இடையே கடந்த வருடம் பேனர் ஒன்றை கிழித்தது தொடர்பாக முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. எனவே, அதற்கு பழிதீர்க்கும் விதமாக தற்போது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. தாக்குல் நடத்தி விட்டு தலைமறைவான இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
– பாரூக்.