கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் மிக அதிகமான சுற்றுலா மையங்களைக் கொண்ட மூணாறு பகுதியில் இ-பாஸ் இல்லாத காரணத்தினால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.தமிழக சுற்றுலா பகுதிகளில் இ -பாஸ் முறை அமல்படுத்தப்பட்டதால், மூணாறுக்கு பயணிகள் படையெடுத்து வருகின்றனர். தமிழகத்தில் கொடைக்கானல், ஊட்டி ஆகிய சுற்றுலா பகுதிகளுக்கு மே 7 முதல் இ- பாஸ் முறையை அரசு அமல்படுத்தியது. அதனால் அங்கு செல்ல இயலாத தமிழக சுற்றுலா பயணிகள் கேரளாவில் முக்கிய சுற்றுலா பகுதியான மூணாறுக்கு படையெடுத்து வருகின்றனர். மூணாறில் நகர் உட்பட சுற்றுலா பகுதிகள் அனைத்திலும் பயணிகளின் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டது.
குறிப்பாக மாட்டுபட்டி, எக்கோ பாய்ன்ட், குண்டலை டாம், டாப் ஸ்டேஷன், தேவிகுளம் கேப் ரோடு, தேவிகுளம் சாலையில் அமைந்துள்ள பொட்டானிக்கல் கார்டன், மூணாறு டவுன் இன் அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்கா, லக்கம் நீர் அருவி, குரண்டிக்காடு யானை சவாரி, அணைச்சால் மற்றும் அடிமாலி உள்பட பல பகுதிகளில் வாகனங்கள் கடந்து செல்ல ஒரு மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை காத்திருக்க நேரிட்டது. தவிர கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியிலும், மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை, கன்னிமலை ஆகிய எஸ்டேட் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் கடுமையாக ஏற்பட்டு வாகனங்கள் 2 கி.மீ., துாரம் அணி வகுத்து நின்றன.
போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் மட்டும் இன்றி உள்ளூர் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ – பாஸ் முறையை கேரள அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
நாளை வரலாறு செய்திக்காக,
–மணிகண்டன் கா மூணாறு,கேரளா