
கோவை விமானநிலையம் அருகில், 2.11.25 அன்று இரவு தன் நண்பருடன் காரில் பேசிக் கொண்டிருந்த தனியார் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவியை மூன்று போதை மிருகங்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்திய நிலையில் , கடுமையாகத் தாக்கப்பட்ட மாணிவியின் நண்பர் கொடுத்த புகாரின் பேரில் உடனடியாக காவல்அதிகாரிகள் ஏழு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடினர்.

இந்நிலையில், துடியலூர் பட்டத்தரசி அம்மன் கோயில் அருகே பதுங்கியிருந்த , சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த குணா (எ) தவசி, சதீஷ் (எ) கருப்பசாமி, கார்த்திக் (எ) காளீஸ்வரன் ஆகியோரைக் கண்டுபிடித்தனர். போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இந்த மூன்று பேரும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இருகூர் பகுதியில் வீடு எடுத்து கட்டிட வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பதும், இம்மூவரின் மீதும் ஒரு கொலை வழக்கு உட்பட வழிப்பறி, அடிதடி எனப் பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

தலைமறைவாக இருந்த மூவரையும் பிடிக்கச் சென்ற காவலர்கள்மீது குற்றவாளிகள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாக்குதல் நடத்தினர்.
இதில் சந்திரசேகர் என்ற காவலருக்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு விழுந்தது. வெட்டிவிட்டுத் தப்பி ஓடியவர்கள் மீது பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜுன் மற்றும் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் ஞானசேகரன் ஆகியோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கருப்பசாமி, காளீஸ்வரன் ஆகிய இருவருக்கும் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. குணா என்பவருக்கு ஒரு காலில் மட்டும் குண்டு பாய்ந்தது. இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அரிவாளால் வெட்டப்பட்ட காவலர் சந்திரசேகரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருக்கிறார்.
பெற்றோர்களே! தயவுசெய்து உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள்!
செய்தித் தொகுப்பாளர்கள்:
-சோலை ஜெய்க்குமார் &
-Ln. இந்திராதேவி முருகேசன் ,
நிர்வாகக்குழு.











