
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா கடந்த ஏப்ரல் 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நடைபெற்ற ஒவ்வொரு நாளும் சுவாமியும் அம்பாளும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் 10-ம் நாளான நேற்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது.
அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் பிரியாவிடை நாயகி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
“அரோகரா… அரோகரா…” என்ற கோஷம் விண்ணைப்பிளக்க, விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வடம் பிடித்து இழுக்க, நான்கு ரதவீதிகள் வழியாகத் தேர் வலம் வந்தது. தேர் சென்ற வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் மற்றும் பழங்களைச் சமர்ப்பித்து சுவாமிக்குச் சிறப்பு அர்ச்சனை செய்து வழிபாடு நடத்தினர்.
தேரோட்டத்தை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க, விளாத்திகுளம் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 100-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விளாத்திகுளம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்த இந்தத் தேரோட்ட நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பக்தியையும் ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












