இன்று மதியம் வேளாங்கண்ணியில் இருந்து திருப்பத்தூர் வழியாக மதுரையை நோக்கி 23 பயணிகளுடன் ஒரு அரசுப்பேருந்து சென்றுகொண்டிருந்தது.
அந்தப் பேருந்து சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.செவல்பட்டி விலக்கு அருகே சென்றபோது எஸ்.செவல்பட்டியிலிருந்து இரு சக்கர வாகனம் ஒன்று முக்கியச் சாலையில் ஏறுவதற்காக வேகமாக வந்துள்ளது.
அதனைக் கண்ட அரசுப் பேருந்தின் ஓட்டுனர் இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதாமலிருக்க பிரேக் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து, சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 23 பேரில் 18 பேர் லேசான காயமடைந்தனர். உடனடியாக தகவலறிந்த,
எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேருந்தில் பயணம் செய்த அனைவரையும் மீட்டு காயமடைந்த 18 பேரையும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவிக்காக அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
– அப்துல்சலாம், பாரூக்.