கோவை அருகே உள்ள மதுக்கரையில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை வனப்பகுதி வழியாக ரெயில்வே தண்டவாளம் செல்கிறது. இந்த பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயில் மோதி காட்டு யானைகள் அடிக்கடி உயிரிழந்து வருகிறது.
இதைத்தடுக்க ஆய்வுக்குழு அமைத்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதையடுத்து கேரளாவை சேர்ந்த ஓய்வு பெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஹரிகுமார் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவினர் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையை தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா பெற்றார்.
அதில் கூறியிருப்பதாவது:-
மதுக்கரையில் இருந்து கேரளாவுக்கு ஏ மற்றும் பி என 2 இரயில் பாதை வனப்பகுதி வழியாக செல்கிறது. இங்கு கடந்த 20 ஆண்டு களில் 19 விபத்துகள் ஏற்பட்டு 26 யானைகள் உயிரிழந்து உள்ளன. இதில் 90 சதவீத விபத்துகள் இரவில்தான் நடந்து உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் 395 முறை தண்டவாளத்தில் யானைகள் நிற்பதை என்ஜின் டிரைவர்கள் பார்த்து உள்ளனர்.
தண்டவாளத்தின் இருபுறமும் உள்ள செடிகொடிகளை வெட்டு தல், 50 அடி அகலம் கொண்ட சாய்வு தளம் அமைத்து யானைகள் கடந்து செல்ல வழி அமைத்தல், 2 இடங்களில் சுரங்கப் பாதை அமைத்தல், பி லைனில் அதிக விபத்துகள் நடப்பதால் ஏ லைனில் அதிக ரெயில்களை இயக்க செய்தல் என பல்வேறு கருத்துகள் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.