சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அம்பேத்கர் நகரில் வசித்து வரும் சண்முகம் – கௌரி ஆகியோரின் 17 வயதுடைய மகன், சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் படிப்பில் கவனக்குறைவாக இருந்து வந்ததாகவும், இதனால் தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. எனவே, பெற்றோர்கள் அந்த மாணவனை கண்டித்துள்ளனர். இதன் காரணமாக கோபமடைந்த அந்த மாணவன், நேற்று இரவு வீட்டை விட்டு வெளியே கிளம்பி இருக்கிறார். வெகுநேரமாகியும் மகன் வீட்டிற்கு வராத காரணத்தால் அவரது பெற்றோர் அக்கம்பக்கத்தில் இரவு முழுவதும் தேடியுள்ளார்கள்.
இன்று காலைவரை எங்கு தேடியும் அந்த மாணவன் கிடைக்காததால், அவரது பெற்றோர் சிங்கம்புணரி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் சிங்கம்புணரி காவல்துறையினர் மாணவனின் செல்போன் சிக்னல் மூலம் தென் சிங்கம்புணரியில் ஒரு இடத்தில் அவன் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ஒரு கட்டிடத்தின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த அந்த மாணவனை சிங்கம்புணரி காவல்துறையினர் மீட்டனர்.
காணாமல் போன மாணவனை, புகாரளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் கண்டுபிடித்து அவனது தாயார் கௌரியிடம் ஒப்படைத்தனர். இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிங்கம்புணரி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் மோகன், திருமுருகன், ராஜா மற்றும் கௌசல்யா ஆகியரையும், இவர்களை ஒருங்கிணைத்து ஊக்குவித்த சார்பு ஆய்வாளர் குகன் அவர்களையும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.