மதுரை மாவட்டம், மேலூர் வட்டம் அறயிணிபட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர் சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் குடும்பத்துடன் தங்கியிருந்து விவசாயக் கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரகுபதி(8) உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர்.
நேற்று மாலை சிறுவன் ரகுபதியும் மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரர்கள் இருவரும் காளாப்பூர் திருநகர் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடைக்குச் சென்று விட்டு தங்களது வீட்டிற்குச் செல்வதற்காக சாலையைக் கடந்திருக்கிறார்கள். அதே நேரத்தில், காரைக்குடியில் இருந்து திண்டுக்கல்லை நோக்கி பொம்மைய கொண்டான்பட்டியைச் சேர்ந்த செல்வகுமார்(41) என்பவர் காரை ஓட்டி வந்திருக்கிறார். அப்போது, செல்வகுமார் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக ரகுபதியின் மீது பின்புறமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ரகுபதி, செல்லும் வழியிலேயே இறந்தார்.
சிறுவன் ரகுபதியின் மரணம், அவரது உறவினர்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எஸ்.வி.மங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் விஜயன், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.