நெல்லை மாவட்டம் பழவூர் அருகே ரம்மி விளையாட்டால் கடன் தொல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஏட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள மாடன் பிள்ளை தர்மத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் ரவி செல்வன் (40). அஞ்சுகிராமம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ரம்மி விளையாட்டு மற்றும் குடிபோதையில் மிகுந்த ஆர்வம் உண்டு என்று கூறப்படுகிறது.
இதனால் ரவி செல்வன் சரிவர வேலைக்கு செல்லாமல் அக்கம்பக்கத்தினரிடம் லட்சக் கணக்கில் கடன் வாங்கி, ரம்மி விளையாட்டில் ஈடுபாடு காட்டியதாக தெரிகிறது. ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இவர் கடன் தொல்லையால் மிகுந்த விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுவில் விஷம் கலந்து குடித்த ரவி செல்வன் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அப்பகுதி வழியாக சென்றவர்கள் மயங்கிக் கிடந்த ரவி செல்வன் குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு லெவிஞ்சிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவருக்கு உஷா என்ற மனைவியும் மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். சம்பவம் குறித்து பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அன்சாரி, நெல்லை.