பிராங்க் (Prank) என்று கூறிக்கொண்டு சமீப நாட்களாக பொது இடங்களில் சில யூடியூப் சேனல்கள் மக்களை பயமுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமுள்ளன.
இந்நிலையில் சென்னையில் பிராங்க் வீடியோக்களை எடுப்பதற்கு சில கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்தனர். இதனால் இம்மாதிரியான யூடியூபர்களின் தொல்லைகள் ஓரளவு குறைந்ததாக சென்னைவாசிகள் பெருமூச்சு விட்டனர். ஆனால் கோவையில் இம்மாதிரியான கட்டுப்பாடுகள் அதிகம் இல்லாத காரணத்தினால் தொடர்ந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிராங்க் ஷோக்கள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், தற்போது இந்த பிராங்க் ஷோ படப்பிடிப்புகள் குறித்து முக்கிய அறிவிப்பை கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கூறியுள்ளதாவது, ‘பொதுமக்கள் நடமாட்டம் உள்ள இடங்களாகிய பூங்காக்கள் , நடைப்பயிற்சி மைதானங்கள் , பள்ளி வளாகங்கள் போன்ற பல பகுதிகளில் தனிநபர்கள் சிலர் பொதுமக்களிடையே குறும்புத்தனமான செயல்களில் ஈடுபட்டு அவற்றை வீடியோக்களாக எடுத்து குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் ( Prank Videos ) தங்களுக்கென்று யூ – டியூப் சேனல் வைத்துக் கொண்டு அதில் வெளியிட்டு வருவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.
குறும்புத்தனமான வீடியோக்கள் என்ற பெயரில் வீடியோ எடுக்கும் பலர் அதை தொழில்முறை ரீதியாக செய்து யூ-டியூப் சேனலில் வெளியிட்டு அதன் வாயிலாக பணமும் சம்பாதித்து வருகிறார்கள். குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் அமைதியான சூழ்நிலையினை விரும்பி பூங்காக்களை நாடி வருபவர்களிடையேயும், நடைப்பயிற்சிக்காக மைதானங்களுக்கு வருபவர்கள் இடையேயும் , வணிக வளாகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள் இடையேயும் மிகுந்த தாக்கத்தையும், அமைதியான சூழ்நிலைகளில் திடீர் பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன.
சில வீடியோக்களில் நடிப்பவர்கள் பொதுவெளியில் முகம்சுழிக்கும் வண்ணம் எதிர்பாலினத்தாரை எதேச்சையாக நடப்பதுபோல் தொட்டு அல்லது கையை பிடித்து அநாகரீகமாக நடிக்கிறார்கள் . திடீரென்று நிகழும் மேற்படி வரம்புமீறிய செயல்களானது சம்மந்தப் பட்டவர்களுக்கு உடல்ரீதியாக அதிர்ச்சியையும் , மனரீதியாக திகைப்பையும் ஏற்படுத்துகிறது . பின்னர் Prank Video எடுப்பவர்கள் அதுகுறித்து தெரிவித்து சமாதானம் செய்கின்றனர். இருப்பினும் இச்செயல்கள் பொதுமக்களிடையே, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களிடையே, விரும்பத்தகாத எதிர் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக இவ்வாறு எடுக்கப்பட்ட Prank Videoக்கள் யூ – டியூப் சேனல்களில் சம்மந்தப்பட்ட நபரின் அனுமதியின்றியும், அவருக்கு தெரியாமலும் வெளியிடப்படுவதால் அவரது தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுகிறது. குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் இச்செயலானது, அடிப்படை உரிமையான தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது. கோவை மாநகரிலும், சமீப காலமாக Prank Videos என்ற பெயரில் பந்தய சாலை போன்ற மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் குறும்புத்தனமான வீடியோ எடுப்பவர்களின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடையே அதிருப்தியும், புகாரும் எழுந்துவருகிறது.
எனவே, கோவை மாநகரில் எவரேனும் Prank Video எடுத்தல் என்ற விதத்தில் பொதுமக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் அவர்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு உண்டாக்கும் வகையில் நடந்து கொண்டாலோ அல்லது அதுபற்றிய புகார் வரப்பட்டாலோ உடனடியாக சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படுவதுடன் அவரது வீடியோ சேனலும் முடக்கப்படும்.
மேலும் புகார் தெரிவிக்கப்பட்ட நபர்களின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் மட்டுமின்றி, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பிற சிறப்பு சட்டப் பிரிவுகளின் கீழும் வழக்கு தொடரப்பட்டு கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது’ என காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.