‘விசைத்தறிகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை, அரசு மறுபரிசீலனை செய்யும் வரை மின் கட்டணத்தை செலுத்தப்போவதில்லை’ என, தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுக்க ஆறு லட்சம் விசைத்தறிகள் உள்ளன.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாள் ஒன்றுக்கு ஐந்து கோடி மீட்டர் துணி உற்பத்தியாகிறது. அதன் மதிப்பு 150 கோடி ரூபாய். இதன் வாயிலாக, ஏழு கோடி ரூபாய் அரசுக்கு ஜி.எஸ்.டி.,யாக செலுத்தப்படுகிறது. இதில் மாநில அரசின் பங்கு மட்டும் 3.75 கோடி ரூபாய். விசைத்தறி மற்றும் அதை சார்ந்த தொழிலில், பத்து லட்சம் பேர் பணிபுரிகின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் ஐந்து பேர் என்றால், மொத்தம் ஒரு கோடி பேர் இத்துறையை சார்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழக அரசு உயர்த்தியுள்ள மின்கட்டணத்தால், இத்துறையினர் ஆடிப்போயுள்ளனர். தொழிலை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி ஆகியோர் கூறியதாவது: மின்கட்டணம் 31 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி உயர்த்தப்பட்டால், உற்பத்தி செலவு அதிகரிக்கும்; துணி விலை உயரும். துணி விலை உயர்ந்தால், வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் துணிரகங்களை அனுப்ப முடியாது. துணி விலை உயரும் போது, மற்ற பொருட்களின் விலையும் உயரும். மின்சாரம் என்பது அனைத்து தொழிலுக்கும் அடிப்படையானது.
விசைத்தறி தொழிலை பாதுகாக்க, முன்னாள் முதல்வர்கள் சலுகைகளை அறிவித்தனர்.ஆனால் தற்போதைய அரசு, விசைத்தறியை பற்றி சிந்தித்ததாக தெரியவில்லை. அதனால்தான் இத்தொழில் அழியும் அளவுக்கு, மின் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். விசைத்தறி மற்றும் அதைச்சார்ந்த ஜவுளித்துறை உற்பத்தியை நிறுத்தினால், ஒரு கோடி குடும்பங்கள் தமிழகத்தில் பாதிப்புக்குள்ளாகும்.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வரிடம் மின் கட்டண உயர்விலிருந்து விசைத்தறிகளுக்கு விலக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதே சமயம், உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை செலுத்த மாட்டோம் என்றும் அறிவித்துள்ளோம். அரசின் முடிவுக்கு பிறகு, அடுத்த கட்ட போராட்டம் குறித்து பிற அமைப்புகளுடன் பேசி முடிவெடுப்போம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.