பிளஸ் 2 படிக்கும் மாணவியை பேருந்து நிழற்குடையில் அமர வைத்து ஒரு மாணவன் தாலி கட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் காந்தி சிலை அருகில் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்கான மினி பேருந்து நிறுத்தம் உள்ளது. பயணிகள் வசதிக்காக அங்கு பேருந்து நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில்தான் மாணவிக்கு தாலி கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சிதம்பரம் அருகே உள்ள பெராம்பட்டு ஊராட்சி, வெங்காயதலமேடு கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படிக்கும் ஒரு பள்ளி மாணவியும், சிதம்பரம் அருகே உள்ள வடகரிராஜபுரம் கிராமத்தை சேர்ந்த அருண்குமார் என்ற தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் மாணவனும் கடந்த சில நாட்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள விரும்பியுள்ளனர். அதற்கு அவர்களது நண்பர்கள் ஒத்துழைக்க பேருந்து நிறுத்தத்தில் அமர வைத்து நண்பர்கள் முன்னிலையில் அந்த மாணவிக்கு மஞ்சள் கயிற்றை தாலியாக அந்த மாணவர் கட்டியுள்ளார். முகம் முழுவதும் சிரிப்பு மலர, வெட்கத்தில் முகத்தைப் பொத்திக் கொண்டு அந்த மாணவி அதை ஏற்றுக் கொள்கிறார்.
அதற்கு அருகில் உள்ள மாணவர்கள் வாழ்த்துச் சொல்லி, கையில் வைத்திருந்த பூக்களை தூவுகின்றனர். இருவருமே மைனர்களாக இருக்கக்கூடும் என்பது அந்த வீடியோவை பார்க்கும் போது தெரிகிறது. இந்த நிகழ்வின் காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதுகுறித்து சிதம்பரம் நகர காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. மாணவர்கள் தாலி கட்டிக் கொள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் சமூகத்தில் அதிகரித்துள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக்.