நெல்லை மாவட்டம், களக்காட்டை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது62). இவரது மனைவி செல்வி (60). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மலில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி மரக்கடை மற்றும் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் செல்விக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது செல்வியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாததால், சொந்த ஊரான களக்காடு செல்ல முடிவு செய்தனர். ஆட்டோ மூலம் அருணாச்சலம், செல்வி இருவரும் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றனர். பின்னர் அங்கிருந்து நெல்லை செல்ல அரசு விரைவுப்பேருந்தில் ஏறினர். அவர்கள் பயணித்த பேருந்து சிங்கபெருமாள் கோவில் அருகே செல்லும் போது செல்வி மயங்கிய நிலையில் இருப்பதை பார்த்த பேருந்து நடத்துனர், உடனடியாக 108 ஆம்புலன்சை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
பேருந்து செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அடையும்போது அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் செல்வியை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இது குறித்து செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்திய பின்பு, செல்வியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், போதிய பணம் இல்லாததால் அருணாச்சலம் செய்வதறியாது திகைத்து நின்றார்.
இதை அறிந்த செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் அசோகன், தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றை ஏற்பாடு செய்து அதற்கான பணத்தையும் அவரே கொடுத்து செல்வியின் உடலை களக்காட்டுக்கு அனுப்பி வைத்தார்.
துயரமான நேரத்தில் முதியவருக்கு உதவிய காவல் ஆய்வாளர் அசோகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நாளைய வரலாறு செய்திக்காக
– ராயல் ஹமீது.