சிங்கம்புணரியை சேர்ந்த கல்லூரி மாணவர் கொட்டாம்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி சாவு!
புத்தாண்டு தினமான நேற்று கொட்டாம்பட்டி அருகே சிங்கம்புணரியை சேர்ந்த கல்லூரி மாணவர் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் கார்த்திக் பாண்டியன் (வயது 19). தெக்கூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இவருடைய கல்லூரி நண்பர் சுதாகர் (17). இவர்கள் இருவரும் கொட்டாம்பட்டி அருகே உள்ள பூமங்களப்பட்டியை சேர்ந்த மற்றொரு நண்பரான மகேஸ்வரனை (16) பார்க்க புத்தாண்டு தினமான நேற்று சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் 3 பேரும் காரியேந்தல்பட்டியில் சின்னகண்ணு என்பவரின் தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் குளித்துள்ளனர். குளித்துக் கொண்டிருந்த கார்த்திக் பாண்டியன் திடீரென எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியுள்ளார். அதை பார்த்த நண்பர்கள் இருவரும் கிணற்றில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டனர். உடனடியாக பக்கத்துத் தோப்பிலிருந்த சிவசுப்பிரமணியன் என்பவரது உதவியுடன் இது குறித்து கொட்டாம்பட்டி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் மூழ்கிய கார்த்திக்பாண்டியனை தேடினார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கிணற்றுத் தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றிக் கொண்டிருந்த நிலையிலும் தீயணைப்புதுறையினர் கார்த்திக்பாண்டியனை தேடும் பணியை மேற்கொண்டனர். பின்னர் மேலூர் தீயணைப்புத்துறையினரும் தேடும் பணியில் இணைந்து கொண்டனர். நண்பகல் வேளையில் மூழ்கிய வாலிபரை இரவு வரை போராடி சுமார் 8 மணி நேரத்திற்கு பின் கார்த்திக் பாண்டியனை பிணமாக மீட்டனர்.
பின்னர் உடற்கூறாய்வுக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அவரது உடலை அனுப்பி வைத்தனர். இது குறித்து கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ரமாராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் கிணற்றில் குளித்த கல்லூரி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.