திருச்செந்தூர் கோவிலில் துணிகரம்!!
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களிடம் தங்க நகைகளை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்து, 5½ சவரன் நகைகள் மீட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டாப்பாறை பகுதியைச் சேர்ந்த ஆத்திமுத்து மனைவி மல்லிகா (60) என்பவர் கடந்த 01.01.2023 அன்று திருச்செந்தூர் கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்துவிட்டு திருச்செந்தூர் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்தபோது அவரது 3 சவரன் தங்க நகை திருடு போயுள்ளது.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த முத்துச்சாமி மகன் வானமாமலை (35) என்பவர் கடந்த 26.01.2023 அன்று திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருடி போயுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் சாத்தான்குளம் இடைச்சிவிளையைச் சேர்ந்த காசி மகன் முத்துக்குமார் (25) என்பவர் கடந்த 26.01.2023 திருச்செந்தூர் கோவில் தரிசனத்திற்கு வந்தபோது கோவில் வளாகம் பகுதியில் வைத்து அவரது 10 கிராம் எடையுள்ள தங்கச் செயின் திருடு போய் உள்ளது. இதுகுறித்து மேற்படி மல்லிகா, வானமாமலை மற்றும் முத்துக்குமார் ஆகியோர் நகை திருடு போனதாக அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆவுடையப்பன் மேற்பார்வையில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கனகாபாய் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தனிப்படை போலீசார் சி.சி.டி.வி கேமரா காட்சிகள் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில் திருநெல்வேலி பாலபாக்கிய நகரைச் சேர்ந்த பரமசிவம் என்பவரது மனைவி ராமலட்சுமி (எ) பேச்சியம்மாள் (60) மற்றும் திருநெல்வேலி குமரேசன் காலனி சேர்ந்த சண்முகம் மனைவி கல்யாணி (எ) கலா (49) ஆகிய இருவரும் சேர்ந்து தங்க நகை திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் அவர்கள் இருவரையும்
கைது செய்து அவகளிடமிருந்த ரூ.1லட்சத்து 70ஆயிரம் மதிப்புள்ள 5½ சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராமலெட்சுமி (எ) பேச்சியம்மாள் மீது திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் 5 திருட்டு வழக்குகளும், தென்காசி காவல் நிலையத்தில் 8 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என 17 வழக்குகளும் உள்ளது.
கல்யாணி (எ) கலா மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தென்காசி மாவட்டம் குற்றாலம் காவல் நிலையத்தில் 6 திருட்டு வழக்குகளும், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், களக்காடு காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகளும், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும் என 13 வழக்குகள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.