கோவை மாவட்டம், உக்கடம் அடுத்த சாரமேடு பகுதியை சேர்ந்தவர் 49 வயதான கயூப்கான், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய செல்போனுக்கு கடந்த சிலநாட்களுக்கு முன்னர், ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில் வெளிநாட்டில் வேலை வேண்டும் என்றால், அணுகவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உடனே கயூப்கான், அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய நபர், தனது பெயர் 35 வயதான கார்த்திகேயன் என்றும், திருச்சியில் இருந்து பேசுவதாகவும், பணம் கொடுத்தால் துபாயில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி உள்ளார். அதை நம்பிய கயூப்கான் பணத்தை தயார் செய்து விட்டு கார்த்திகேயனுக்கு தொடர்பு கொண்டார்.
உடனே அவர் கோவை வந்து ரூ. 1½ லட்ச ரூபாயை வாங்கியதுடன் துபாய் செல்வதற்கான விசா உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்துள்ளார். அதை வைத்து கயூப்கான் துபாய் சென்றுள்ளார். ஆனால், அங்கு அவருக்கு வேலை கிடைக்க வில்லை. இதனால், அவர் சொந்தஊருக்கு மீண்டும் திரும்பினார். இதையடுத்து அவர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு தனக்கு வேலை கிடைக்காததால், கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்கும்படி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் கரும்புக்கடை காவல் துறையினர் கார்த்திகேயன் மீது நேற்று, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.