வால்பாறை;வால்பாறை – பொள்ளாச்சி ரோட்டில் காட்டுமாடுகள், பகல் நேரத்தில் உலா வருவதால் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை கவனமாக இயக்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரு வனச்சரகங்களிலும், வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன.
குறிப்பாக, வால்பாறை நகரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில், வரையாடு, சிங்கவால் குரங்குகளும் அதிக அளவில்உலா வருகின்றன. இதேபோல், அய்யர்பாடி, சின்கோனா, ரயான் டிவிஷன், சிறுகுன்றா உள்ளிட்ட எஸ்டேட் பகுதியில், பகல் நேரத்தில் காட்டுஎருமைகள் கூட்டமாக தேயிலை காட்டிலும், ரோட்டிலும் முகாமிடுகின்றன.
வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறை மலைப்பகுதியில், வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன. இதை கருத்தில் கொண்டு, இந்த வழித்தடத்தில் வாகனங்களை மிகுந்த கவனத்துடன் இயக்க வேண்டும்.
குறிப்பாக, வால்பாறையை கண்டு ரசிக்க வரும் சுற்றுலா பயணியர் தங்களது வாகனங்களை மலைப்பாதையில் மெதுவாக இயக்க வேண்டும். வாகனங்களை வேகமாக இயக்கி வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், வனஉயிரின பாதுகாப்பு சட்டப்படி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.