கழிப்பிடத்தை காணவில்லை.. கண்டுபிடித்து தர கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை அக்கா மலை பேருந்து நிலையம் நகராட்சி எதிர்ப்புறம் உள்ள கட்டண கழிப்பிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் பொது மக்களை பெரிதும் சிரமத்துக்கு உள்ளாக்கி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் வால்பாறை நகராட்சி மூலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே மக்களின் அடிப்படைத் தேவைகள் என்று சொல்லி வளர்ச்சி பணிகளை துவங்கி ஏனோ தானோ என்று கட்டிடங்களை கட்டுவதும் பொதுமக்களுக்கு பயனில்லாமல் மக்கள் வரிப்பணம்
வீணாகி விடுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து வால்பாறை வணிகர் சம்மேளனத்தின் தொகுதி செயலாளர் சரவணன் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்துள்ளார். மனுவில் உயர்திரு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு, எங்கள் அமைப்பின் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வால்பாறையில் பழைய பேருந்து நிலையத்திற்கு சொந்தமான மக்கள் வரிப்பணத்தில் கட்டிய கழிப்பிடத்தை கடந்த 10 வருடங்களாக காணவில்லை.

இது தொடர்பாக வால்பாறை நகராட்சி ஆணையர் அவர்களிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எங்கேயோ ஒளித்து வைத்துக்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு தர மறுக்கின்றார். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகளும், பள்ளி பெண் குழந்தைகளும், கர்ப்பிணி பெண்களும் மிகுந்த துயரத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர்.

ஆகவே சமூகம் ஐயா அவர்கள் ஆணையாளர் ஒளித்து வைத்துக்கொண்டு தர மறுக்கின்ற கழிப்பிடத்தை, தயவுசெய்து எங்கு? ஒளித்து வைத்துள்ளார் என்பதை கண்டறிந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வழங்கிட வேண்டுமாய் தங்களை தாழ்மையுடன் பணிவுடன் வேண்டி கேட்டுக்கொள்கின்றோம்.

குறிப்பு: மக்கள் வரிப்பணத்தில் செய்யக்கூடிய எந்த ஒரு செயலையும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு செல்வது தங்களைப் போன்ற நேர்மையான அதிகாரிகளின் கடமை என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

செய்தியாளர்,

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp