
வால்பாறை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் வால்பாறை வட்டாரக் கிளையின் செயற்குழு கூட்டம் வால்பாறை சி.ஐ.டி.யு (CITU) அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் திரு. மா. பரமசிவன் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் திரு. பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற திருவாளர்கள் பாலாஜி, அருண் கணேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி அனைவரையும் வரவேற்றனர். வட்டாரத் தலைவர் திரு. பாஸ்கரன் முன்மொழிய கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு;

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தீர்மானம் 1, வால்பாறை வட்டாரக் கிளையின் செயலாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு தற்பொழுது பணி நிறைவு பெறும் தோழர் மா. பரமசிவன் அவர்களுக்குப் பாராட்டுக்களையும் அனைத்து உறுப்பினர்கள் சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவிப்பது. தீர்மானம் 2, வால்பாறை வட்டாரத்தின் புதிய பொறுப்புச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோலையார் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியை திருமதி. சண்முகபிரியா அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பது. தீர்மானம் 3, வால்பாறை வட்டாரத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதித் தேர்ச்சி பெற்ற பின்னரும் வருடாந்திர ஊதிய உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு உடனடியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
தீர்மானம் 4, வால்பாறை ஆசிரியர் சிக்கன கூட்டுறவு கடன் சங்கத்தில் 2024-25 மற்றும் 2025-26 ஆகிய நிதியாண்டுகளுக்கான உறுப்பினர் லாபப் பகிர்வுத் தொகையையும் ஆசிரியர்களின் சம்பளப் பிடித்தப் பணப் ரசீது அறிக்கையையும் கூட்டுறவுச் சங்கச் செயலாளர் உடனடியாக வழங்க வேண்டும்.
தீர்மானம் 5, கருமலை குரூப் ஆசிரியர்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் பள்ளிக்குழுச் செயலாளரின் பாரபட்சமான நடவடிக்கைகளைக் கண்டித்தும் அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் வட்டாரக் கல்வி அலுவலரைக் கண்டித்தும் வருகின்ற 22/07/2026 அன்று மாலை 4:30 மணியளவில் பொள்ளாச்சி மாவட்டக் கல்வி அலுவலகத்தின் (DEO) முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது. தீர்மானம் 6, வால்பாறை வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களின் பணப் பயன்கள் சார்ந்த கோரிக்கைகளுக்குக் காலதாமதம் ஏற்படுத்துவதையும் லஞ்சம் வாங்க முற்படுவதையும் அறவே தவிர்க்க வேண்டும். மேலும் ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் பணப் பயன்கள் மற்றும் ஓய்வூதியம் விரைவாகக் கிடைக்க வட்டாரக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துவது. தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் வால்பாறை வட்டார ஆசிரியர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆசிரியர்கள் திரு. சுனில் லால், மகேந்திரன், குழந்தை மைக்கேல் ராயர், சீனா கே. ராஜன், ராபர்ட், அஜித்குமார், அருண்பாண்டி மற்றும் அருணா ஆகியோர் விரிவாக விவாதித்தனர். இறுதியாக திருமதி. அருணா நன்றி உரை ஆற்றினார். இன்குலாப் ஜிந்தாபாத் ஆசிரியர் ஒற்றுமை ஓங்குக ஆகிய புரட்சி முழக்கங்களுடனும் தேசிய கீதத்துடனும் செயற்குழு கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-வால்பாறை P.பரமசிவம்.








