கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் முன்பு சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் கதவு இல்லாததால் இரவு நேரத்தில் தார்பாலினால் கதவை மூடி வைத்துவிட்டு கடைக்குள்ளேயே உறங்குவது வழக்கம்.
கடையில் செந்தில்குமாரின் மகன் செல்வசிவா தந்தைக்கு உதவியாக இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணி அளவில் தார்பாலினை திறந்து உள்ளே வந்த சிவகங்கை மாவட்டம் கீதக்காதியைச் சேர்ந்த முகமது ஆஷிக் என்பவர் சிவசெல்வாவை எழுப்பி சிகரெட் வேண்டும் எனக் கேட்டுள்ளார்.
தொடர்ந்து நான்கு சிகரெட்களை கொடுத்து விட்டு 54 ரூபாய் பணம் கேட்டுள்ளார். அப்போது குடிபோதையில் இருந்த ஆஷிக் தன்னை காவலர் என அறிமுகப்படுத்திக் கொண்டு காலையில் வந்து பணம் தருவதாகக் கூறியுள்ளார்.
செல்வசிவாவும் சரி என கூறிய நிலையில் சிறிது நேரத்தில் முகமது ஆசிக் பேடிஎம் மூலம் 50 செலுத்தினார். மீதம் நான்கு ரூபாயை செல்வ சிவா கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலர் கடையிலிருந்து வெளியே வருமாறு செல்வசிவாவை அழைக்க, வெளியே வந்த செல்வசிவாவை தாக்கிய ஆஷிக் அவரது காதை கடித்தார்.
இதனால் வலியால் துடித்த செல்வசிவா உடனடியாக தனது தந்தைக்கு தகவல் தெரிவித்த நிலையில் காவலரை அவரது நண்பர்கள் அழைத்துச்சென்றனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த செந்தில்குமார் தனது மகனை கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
மேலும் இது தொடர்பாக காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், தமிழ்நாடு சிறப்புக் காவல் படை காவலர் முகமது ஆசிக் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.